Thursday, August 12, 2010

அனைவருக்கும் கல்வி

ஒவ்வொரு மனிதனுக்கு தனது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, இன்றைய உலகில் மிகப்பல குழந்தைகள் இந்த வாய்ப்பு ஏதும் இன்றி வளருகின்றன. ஏனெனில் அவர்களது அடிப்படை உரிமையான ஆரம்பக் கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. கல்வித் திட்டங்கள் பலவற்றின் காரணமாக, 2000ம் ஆண்டின் முடிவிற்குள் இந்திய கிராம ஜனத்தொகையின் 94% பேர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக ஆரம்பக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன. 84% மக்களுக்கு நடுநிலைப் பள்ளிகள் 3 கி.மீ. தூரத்திற்குள் உருவாக்கப்பட்டு விட்டன. எஸ்.சி/எஸ்.டி பிரிவினரையும், பெண் குழந்தைகளையும் பள்ளிகளிள் சேர்க்க சிறப்பு மிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் ஐந்தாண்டு திட்ட காலகட்டத்திலிருந்தே ஆரம்பக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கல்வி நிலையங்களில் குழந்தைகள் சேர்ப்பு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது.

அதேபோல ஆரம்பக் கல்வி நிலையங்களுக்கும், அதற்கு அடுத்த கட்ட கல்விச் சாலைகளும் எண்ணிக்கையில் பெருகிவிட்டன. 1950-51 ஆண்டில் ஆரம்பக் கல்விக்கான பள்ளிகளில் 3.1 மில்லியன் மாணவர்கள் மட்டும் சேர்ந்தனர். 1997-98 ஆண்டைய கணக்கின்படி இந்த எண்ணிக்கை 39.5 மில்லியனாக உயர்ந்தது. ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகியன 1950-51ம் காலகட்டத்தில் 0.223 மில்லியன்கள். இந்த எண்ணிக்கை 1996-97-ல் 0.775 மில்லியன்களாக உயர்ந்தது. 2002-2003 ஆண்டில் 6-14 வயதுள்ள குழந்தைகளில் 82% பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள், இதை 100% ஆக ஆக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலக மக்களின் வறுமையை முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியும் பாதுகாப்பும் உள்ள வாழ்க்கையை மக்கள் வாழ்வதற்கும், ஒவ்வொரு நாட்டிலுள்ள குடிமக்கள், நலம் பயக்கும் முடிவுகளை தங்களுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் தேர்ந்தெடுக்க அவர்கள் திறனை மேம்படுத்துதல் அவசியம். இந்த நிலையை அடையவேண்டும் என்றால், உலகத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தங்களின் ஆரம்பக் கல்வியையாவது, உயர் தரமுள்ள கல்வி கற்கும் சூழ்நிலை உள்ள பள்ளிகளில் பயில வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும

அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86ஆவது பிரிவில் "6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அவர்களுடைய அடிப்படை உரிமை" என்று கூறப்பட்டிருக்கிறது. இதை நிறைவேற்றும் வகையில் குறிப்பிட்ட கால வரையரைக்குள் இந்திய அரசு தனது முதன்மையான திட்டமாகிய "சர்வ சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.' என்கிற (எல்லோருக்கும் கல்வி') திட்டத்தின் மூலம் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் 11 லட்சம் கிராமங்களைச் சார்ந்த 192 மில்லியன் குழந்தைகளின் கல்வித்தேவைகள் பூர்த்தியாகும்.

இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள்:

1. பள்ளிக்கூட வசதியற்ற இடங்களில் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்துதல்;

2. பள்ளிக்கூடம் இருக்கும் இடங்களில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர், பராமரிப்பு நிதி உதவி ஆகியவற்றை அளித்து பள்ளி மேம்பாட்டிற்கும் நிதி வழங்குதல்;

3. ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள ஆசிரியர்களின் திறனை அதிகரிக்கும் விதமாக அவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் பயிற்சி அளித்தல்;

4. ஆசிரியர்-பயிற்சி உபகரணங்களை மேம்படுத்த மானியம் அளித்தல் மற்றும் கிராம, மண்டல மற்றும் மாவட்ட அளவில் கல்வி உதவிக் கட்டமைப்பைப் பலப்படுத்துதல்;

5. வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களுடன் கூடிய தரமான ஆரம்பக்கல்வி அளித்தல்;

6. பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் தேவைப்படும் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளித்தல்;

7. நகர மற்றும் கிராமப்புறக் கல்வித்திட்ட இடைவெளியைக் குறைக்கும் வண்ணம் கம்ப்யூட்டர் கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுதல்

சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதி நெறிமுறைகள்

1. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவி ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 85:15 என்ற விகிதத்திலும், பத்தாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 75:25 என்ற விகிதத்திலும், அதன்பின் வரும் காலங்களில் 50:50 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.

2. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான சம்பளத் தொகையும் ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 85:15 என்ற விகிதத்திலும், பத்தாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 75:25 என்ற விகிதத்திலும், அதன்பின் வரும் காலங்களில் 50:50 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.

3. 'மஹிலா சமக்யா', தேசிய பால பவன் மற்றும் என்.ஸி.டி.ஈ. எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை தவிர மத்திய கல்வித்துறையின் அனைத்துத் திட்டங்களும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்குப் பின் ஒன்றிணைக்கப்படும். ஆரம்பக் கல்விக்கென சத்துணவு வழங்கும் தேசியத் திட்டம் (மதிய உணவுத் திட்டம்) மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும்; இத்திட்டத்திற்கான உணவு தானியம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை மத்திய அரசும், சமைக்கப்படும் உணவிற்கான செலவை மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளும்.

நடைமுறைக் கோட்பாடுகள்: ஆசிரியர்

1. ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்

ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியிலும் குறைந்தபட்சம் 2 ஆசிரியர்கள்
நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர்

2. பள்ளிகள் / மாற்றுப் பள்ளிக்கூட ஏற்பாடுகள்

வசிக்கும் இடங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்க வேண்டும்;
சேவை சென்றடையாத இடங்களில் மாநில அரசின் கோட்படுகளுக்குட்பட்டு ஈ.ஜி.எஸ். எனப்படும் பள்ளிகளையோ அல்லது புதிய பள்ளிகளையோ அமைப்பதற்கான வாய்ப்பு இருத்தல்;

3. நடுநிலைப்பள்ளிகள்

ஆரம்பப்பள்ளிவரை பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தேவைக்கேற்பவும் இரண்டு ஆரம்பப் பள்ளிகளுக்கு ஒரு நடுநிலைப் பள்ளியோ/வகுப்போ அமைத்தல்

4. வகுப்பறைகள்

ஆரம்பப் பள்ளியிலேயோ/நடுநிலைப் பள்ளியிலேயோ, எது குறைவாக இருக்கிறதோ, அவற்றில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அல்லது வகுப்பு/பிரிவுக்கும் ஒரு அறை இருக்கவேண்டும்; குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களைக் கொண்ட அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் இரண்டு வகுப்பறைகள் மற்றும் வராந்தா ஆகியன அமையுமாறு பார்த்துக்கொள்ளுதல்
நடுநிலைப் பள்ளி/வகுப்புகளில் தலைமை ஆசிரியருக்கு ஒரு அறை அளித்தல்

5. இலவசப் பாடப் புத்தகங்கள்

ஆரம்ப / நடுநிலைப் பள்ளிகளில் அனைத்துப் பெண்கள்/ஆதிதிராவிட/பழங்குடி இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தலா அதிகபட்சம் ரூ.150 வரை பணவுதவி அளித்தல்
தற்பொழுது வழங்கிவரும் இலவசப் பாடப்புத்தகங்களுக்கான செலவை மாநில அரசின் வரவு/செலவுத் திட்டத்திலிருந்தே சமாளித்துக் கொள்ளுதல்
ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாடப்புத்தகங்களுக்கு மாநில அரசு சிறிது மானியம் அளிக்குமேயானால், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திநபன் கீழ் வழங்கப்படும் உதவியானது, குழந்தைகளால் வாங்கப்படும் பாடப்புத்தகங்களின் விலையோடு நிறுத்தப்படும்.

6. கட்டுமானப்பணிகள்

இத்திட்டத்திற்காக 2010ஆம் ஆண்டுவரை வரையப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கட்டுமானத்திற்கான செலவுகளுக்காக பி.ஏ.பி.-யால் அங்கீகரிக்கப்பட்ட தொகையானது மொத்த்த் திட்டச் செலவின் 33 சதவீத்த்தை மிஞ்சக்கூடாது. கட்டிடத்தைப் பராமரிக்க மற்றும் பழுதுபார்க்க ஆகும் செலவு இந்த 33 சதவீதத் தொகையில் அடங்காது.
ஆயினும், 33 சதவீத எல்லையைத் தாண்டாமல் கட்டுமானப் பணிகளுக்கென வருடாந்தரத் திட்டத்தின் 40 சதவீதம் வரை அந்த குறிப்பிட்ட ஆண்டின் திட்ட முன்னுரிமைகளுக்கேற்றவாறு செலவு செய்யலாம்.

7. பள்ளிக் கட்டிடங்களைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல்

வி.ஈ.ஸி. எனப்படும் கிராமக் கல்விக் குழுக்கள்/பள்ளி நிர்வாகக் குழுக்களால்தான் செய்யப்பட வேண்டும்;
பள்ளி நிர்வாகக் குழுவின் தீர்மானத்தைப் பொறுத்து ஆண்டொன்றுக்கு ரூ.5000 வரை;
சமூகப் பங்கீட்டின் அம்சங்களையும் இப்பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்;
கட்டிடத்தைப் பராமரிக்க மற்றும் பழுதுபார்க்க ஆகும் செலவு கட்டுமானப் பணிக்கென ஒதுக்கப்பட்ட 33 சதவீத எல்லைக்குள் அடங்காது;
தங்களது சொந்தக் கட்டிடத்தில் பள்ளி நடத்தும் பள்ளிகளுக்கே மேற்சொன்ன மானியம் வழங்கப்படும்.

8. பள்ளிகளுக்கான மானியம்

பள்ளியிலிருக்கும் செயல்படாத உபகரணங்களுக்குப் பதில் வேறு உபகரணங்கள் வாங்குவதற்காக ஆரம்ப/ நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.2000 கிடைக்கும்.
இச்செலவு வி.ஈ.ஸி. எனப்படும் கிராமக் கல்விக் குழுக்கள்/பள்ளி நிர்வாகக் குழுக்களால்தான் செய்யப்பட வேண்டும்.

9. ஆசிரியர்களுக்க்கான மானியம்

ஆரம்பப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.100 வீதம்.

10. ஆசிரியர் பயிற்சி

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆண்டொன்றுக்கு 20 நாட்கள் வேலையுடன் கூடிய பயிற்சி அளித்தல், பயிற்சி பெறா விட்டாலும் ஏற்கனவே ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 60 நாள் மதிப்பீட்டுப் பயிற்சி அளித்தல் மற்றும் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.70/- உதவித்தொகையாக அளித்து பள்ளியிலேயே பயிற்சி அளித்தல்

11. சமூகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல்

ஒவ்வொரு கிராமத்திலும் அதிகபட்சம் எட்டுப் பேர்களுக்கு - கூடியவரை பெண்களுக்கு - வருடத்தில் இரண்டு நாட்களுக்கு நபர் ஒன்றுக்கு நாளொன்றுக்கு ரூ.30/- அளித்துப் பயிற்சி அளித்தல்

12. உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான சலுகைகள்

குழந்தை ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1200/- வீதம் அளித்து அத்தகைய குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுதல்

13. பள்ளிக்குச் செல்வதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டவர்களுக்கான நிவாரணஙகள்

சேவை வசதி சென்றடையாத இடங்களில் கல்வி உத்தரவாத மையங்களை (ஈ.ஜி.ஸி.) அமைத்தல்;
வேறு மாதிரியான மாற்றுப் பள்ளிக்கூட மாதிரிகளை அமைத்தல்;
இடைவெளியைக் குறைக்கும் பயிற்சிகள், தீர்வுக்கு உதவும் பயிற்சிகள், பள்ளிக்குச் செல்வதைப் பாதியிலேயே நிறுத்திவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் முகாம்கள்

No comments: