Wednesday, August 25, 2010

3. மயிலாப்பூர்- 1906


3. மயிலாப்பூர்- 1906

சென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. தொலமியின் நூலில் இது மைலார்பொன் (Mylarphon) எனக் குறிப்பிடப்பட்டு, இது வளம் மிக்கதும் முக்கியத்துவம் கொண்டதுமானதுமான ஒரு இடம் எனக் கூறப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போத்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.

சமணம்
தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் சமணம் எழுச்சியுற்று இருந்தபோது, மைலாப்பூரிலும் இச்சமயம் செழிப்புற்றிருந்தது. இப்போது சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இங்கே நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மயிலையிலிருந்த இந்த நேமிநாதர் மீது திருநூற்றந்தாதி என்னும் நூலை அவிரோதியாழ்வார் என்பவர் இயற்றியுள்ளார். இது தவிர திருக்கலம்பகம், மயிலாப்பூர் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்பனவும் இப் பள்ளி தொடர்பில் எழுந்தவை ஆகும். இச் சமணக் கோயில் தொடர்பான தொல் பொருட்கள் பலவும் சாந்தோம் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்து சமயம்
இப்பகுதியில் நீண்டகாலமாகவே இந்து சமயத்தின் சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் சிறப்புற்று விளங்கின. பண்டைக்காலக் கரையோர மைலாப்பூரில் சிவனுக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, இன்றைய கபாலீஸ்வரர் கோயிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. போத்துக்கீசர் இக்கோயிலை அழித்துவிட்டனர். இன்றைய கபாலீஸ்வரர் கோயில் 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளை அண்டிக் கட்டப்பட்டதாகும்.

கிறிஸ்தவம்
இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான சென், தோமஸ் கி.பி 52 இல் கேரளாவுக்கு வந்து அங்கே சமயப் பணி செய்தபின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றும், கி.பி 72 ஆம் ஆண்டில் சென்னை அருகில் உள்ள சின்ன மலை (Little Mount) அருகே கொல்லப்பட்டார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இவரது உடல் மயிலாப்பூருக்கு எடுத்துவரப்பட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. இவ்விடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

No comments: