Tuesday, October 26, 2010

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து


ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

வித்தியாசமான உதவி


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.

யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே


இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். 'நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே' என்றான் அவன்.

கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?


அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

உலகத்திற்கு உப்பாய் இரு


ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான்.

மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான்.

'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான்.

அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான்.

ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.

ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது.

மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

புத்தரே தங்கியிருக்கிறார்


ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

வாழ்வு


காலந்தவறி அசைந்தாடி வரும்
ஓசி பஸ்சும்
சளைக்காது
மூசிவீசும் குளிர்க்காற்றும்
நெஞ்சினிலுள் இறங்கும்
கோபக் கவளங்களாய்

வெறுப்பும் சலிப்பும்
குழைத்தெறியும்பொழுதில்
என்றேனும் ஒருகால்
உருகாதோ உறைபனி

மதுவருந்தி
மயங்கும் வெள்ளியிரவுகளில்
பலவீனங்களுடன்
மனிதர்களை நேசிக்க
நெஞ்சு கிஞ்சிக்கும்

பாடப் புத்தகங்களின்
பக்கங்களைப் புரட்டவே அலுப்புறும்
நான்
மாந்தர்களைப் படித்தல்
நடவாதென
நினைவு ததும்பிச் சிரிக்கும்

சுரங்கப் பாதையில்
வகுப்புகளுக்காய்
நடக்கையில்
தென்படும் பெண்களெல்லாம்
தேவதைகளாக மிதக்கின்றனர்

அறிவும் தெளிவும்
தெறித்துச் சிதற
அவர்கள் பேசுகையிலும்
ஆண்களுண்டாக்கும்
காயங்களே
பேச்சிடைப் பொருளாகின்றன

முற்போக்குகளின்
பிரதிநிதியாய்
சமரசங்களற்று
அலையும் இளைஞன்
பட்டத்துடன்
முகவரியற்றுப் போவது
நாளைய விந்தை

அவ்வவ்போது கற்றல்
வன்முறையாய்
சிந்தனையடுக்குகளை
சிதைத்துப்போக
நெருங்குகிறது பரீட்சை

தேடலில்லா
கவிதை போல்
காலத்தை
அசட்டை செய்து
நகர்கிறது வாழ்வு.

கனவு


பாட்டெழுது பூங்குயிலாய், பாதையிடை பூக்களிலே
நாடியுணர் நாயகியின் தேவிமுகந் - தேடிவரு
மாணழகர் காதலிதம் நாணமதை நீத்துன்னிக்
காண்பதுவே காளைக் கனவு.

மெல்லணையாய் பெண்டிரையே மோகவலை தானேறி
கள்ளமன வண்டெனவே கள்ளருந்த - ஆலுகின்ற
வீணரையே வேண்டாது வாழ்வுதனை இன்னலற
காணுமிளங் கன்னிக் கனவு.

பண்ணிசையோ அன்றியொரு பாவெழிலோ தானன்றி
தன்னெதிரில் மூவேளை தம்மக்கள் - உண்ணுதலைக்
கண்ணார நெஞ்சாரக் காண்பதுவே வாணாளில்
காணுமோ ரேழைக் கனவு.

ஏட்டினிலே நானிலமே ஏத்தும் சொல்லிசைப்
பாட்டினிலே சீலமிகு பாரதநம் - நாட்டினிலே
வாணுதல் பூவையரின் காதலதே வாழ்வென்று
காணுதலோர் மோழைக் கனவு.

பாழ்பட்ட செல்வத்தை ஊணறவே சோர்வின்றி
சூழ்ந்திட்ட ஏனையர்க்குஞ் சேர்வின்றி - தாழிட்டு
பேணியவர் தூக்கமற பேயொக்க ஏனாதியாய்
காணும்பே ராசைக் கனவு.

Monday, October 25, 2010

வானில் பறக்கலாம் வா தோழி!


உன்னை
ஒரு முறை அறிந்தேன் - பின்
பலமுறை நீயின்றி ஏங்குகிறேன்.
என்றும் உன்னலமே என் பேச்சு;
இன்று நீயின்றி ஏது மூச்சு
கண்டவுடன் கத்திக் குத்து - இதயத்தில்!
காத்திருப்பதென்னவோ உனக்காய்! - ஆனால்
காலம் போனது கனவாய்

கோடை வெயிலோ,
கார்கால மழையோ,
பனிக்கால குளிரோ
எதுவானால் என்ன?
கன்னிகையே உன் கயல்விழியே - என் காலம்!
நினைவுச் சாரல்கள் நெஞ்சக வயலில் வீசிய போது
கிளைத்ததென்னவோ வெறும் முட்செடிகளே!

தனம் சொன்னது என்னைத் தேடு எப்போதும்,
கானம் சொன்னது என்னைப் பாடு எப்போதும்,
பூவினம் சொன்னது என்னை நாடு எப்போதும்,
பாடம் சொன்னது என்னை படி எப்பொதும்,
துக்கம் சொன்னது என்னை விடு எப்பொதும்,
ஆனால்
நான் சொன்னேன் என்னைத் தொடு எப்பொதும்.

வானம்பாடி போல
சிரமமின்றி சிறகு விரித்து
வேண்டாததை வெறுத்து
துயரங்களை தொலைத்து,
தேடல்களை விடுத்து,
வலிகளை உதறி,
வானில் பறக்கலாம் வா தோழி!

என்று தான் இந்த நிலை மாறுமோ?


இந்த நூற்றாண்டில் ஊடகம் என்றவகையில் இணையம், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றோடு மக்களை அதிகமாக சென்றடைகின்ற இன்னொரு முக்கியமான ஊடகம் சினிமா. சின்னத்திரையும் சரி வெள்ளித்திரையும் சரி நிறையவே மக்களிடை ஆதிக்கம் செய்கின்றது. கிராமங்களில் கூட சினிமா திரையரங்குகள் இருக்கின்றன. ஏன் இன்னும் சொல்லப்போனால் பல தொலைக்காட்சிகளும், வானொலிகளும் இந்த வெள்ளித்திரையில் அதாவது சினிமாவில் தங்கியிருக்கிறது. காமெடியாக, பாட்டாக, காட்சியாக பற்பல நிகழ்ச்சிகளை இந்த திரைப்படங்களை வைத்தே தாயாரித்து தங்கள் காலத்தை போக்குகிறார்கள் என்பதுதான் உண்மை.

அதே போல தான் சின்னத்திரையும். நாடகம் போடத ஒரு தொலைக்காட்சி நம்மவர்களிடையே தாக்குப்பிடிக்குமா என்றால் யோசிக்க வேண்டிய விசயம். இப்படி மக்களை பல வகையில் சென்றடைகின்ற ஊடகமான இந்த சினிமா பெண்களை நோக்கும் விதம் இன்னும் மாறுபடவில்லை?

பல திரைப்படங்களில் பெண்கள் பற்றிய பழமையான கருத்தையே இன்னும் காணமுடிகிறது. கவர்ச்சிக்காக பெண்களை பயன்படுத்துவதும். பெண்களை பண்டமாக பார்ப்பதும் இன்னும் நின்றுவிடவில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனை மையமாக கொண்டு அவரது உதவியால் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்கிறது போல தான் அனேக படங்கள் வெளிவருகின்றன. பெண்களை மையமாக வைத்து அவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்ற மாதிரி படங்கள் வரவில்லை என்று சொல்லவில்லை அப்படி வந்திருந்தாலும் குறைவு தான்.

அழகுக்காக ஒரு ஈர்ப்பிற்காக தான் அநேக படங்களில் பெண் நாயகிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதைப்போன்று தான் பாடங்களில் வருகின்ற காட்சிகளில் நாயகர்கள் சாதாரனமாக ஆடை அணிந்திருப்பார்கள். நாயகிகள் மட்டும் சில படங்களில் அரைகுறையாய் கவர்ச்சியாய் அணிந்திருப்பார்கள். இந்த நிலை ஏன் இன்னும்?

அண்மையில் ஒருபடம் பார்க்க கிடைத்தது. அதில் நாயகனும் அவனது சகோதரனும் நாயகியை காதலிப்பார்கள். நாயகன் சகோதரனுக்காய் நாயகியை விட்டுக்கொடுப்பார். விட்டுக்கொடுக்கிறது பெரிய விசயமே இல்லைங்க. பாராட்டலாம் ஆனால், விட்டுக்கொடுப்பது அந்த பெண்ணின் சம்மதத்தோடு நடக்கிறதா? என்றால் இல்லை. அவர் நினைச்சார் செய்கிறார். இதை விடக்கொடுமை என்ன என்றால் "நீ அவளை எடுத்துக்கோ" என்கிறார் நாயகன். பலமுறை இந்த சொற்றொடர் பாவிக்கப்பட்டது. பரிதாபமாக இருந்தது. இப்படிப்பட்ட வார்த்தை பிரயோகம் பெண்ணை நோக்கி பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. பெண் என்ன பண்டமா?? எடுத்துக்கோ வைச்சுக்கோ என்று கையை காட்டுவதற்கு? இப்படி பல படங்களில் இந்த வசனம் பார்க்ககூடியதாக இருந்தது, இருக்கிறது. அது நிற்க.

சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி பல சந்தர்ப்பங்களில். ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது திருமணம் தான் என்று நினைக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் திடிரென ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசிய கல்யாணம் தடைப்பட்டுவிட்டால் பெண்ணின் தகப்பனார் செய்கின்ற முதல் வேலை. மாப்பிள்ளை வீட்டாரின் காலில் விழுந்து என் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுங்கள். வாழ்க்கையை சீரழிச்சிடாதீங்க என்று புலம்பிற காட்சிகள் பல? ஏனைய்யா இந்த நிலமை? வாழ்க்கை என்பது திருமணமா? திருமணம் நடக்கவில்லை என்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிஞ்சிதா? ஏன் இப்படியான ஒரு மாயையினை அனேக காட்சிகளில் உருவாக்குகிறார்கள்.

திரைப்படங்களில் வருகின்ற இன்னொரு விசயம் என்னவென்றால், நாயகன் அல்லது நாயகியை சார்ந்தவர்கள் அது தாயாக கூட இருக்கலாம் சொல்றது, "பொம்பளை மாதிரி அடக்க ஒடுக்கமாய் இரு"? அதென்னங்க பொம்பளை மாதிரி? புரியவே இல்லை.

படத்தில ஒரு ரவுடி கலாட்டா செய்கிறார். அதன் காரணமாக ஒரு சின்னப்பிள்ளை பாதிக்கப்படுகிறார். இதைப்பாத்த அம்மா கோவம் கொண்டு அந்த ரவுடியை பேசிறாங்க. பொலீஸ் வர, அந்த அம்மா நடந்ததை சொல்ல முற்படுறாங்க ஆனா அந்த நாயகன் விடல. அவர் சொல்றார். "பொம்பளை மாதிரி அடக்கி வாசி" என்ற தொனில அவங்களை பேசிறார்.? ஏன் இப்படி படைக்கிறார்கள் என்று புரியவில்லை.

ஒரு பெண் நியாயத்தை கேட்கக்கூடாதா? ஏன் இப்படி பொம்பளை மாதிரியிரு. அடக்கி வாசி என்ற இந்த பதத்தை பாவிச்சு இன்னும் பிற்போக்கு வாதம் பேசி. பெண்களை முடக்கணும் என்று நினைக்கிறார்கள் என்பது வேதனையான விசயம். அப்படிப்பட்ட வசன நடைகளை கேட்டுவிட்டு இருக்க முடியல. இது ஒரு சில படங்களில் கண்டது தான். ஆனா இப்படி பல படங்களில் நடக்கிறது. பெண்கள் முன்னோக்கி வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற, பல வளர்ச்சியைக்கண்டு விட்ட இந்த காலத்தில ஏன் இப்படியான காட்சிகள் அமைக்கப்படுகின்றன? புரியவில்லை. என்று தான் இந்த எடுத்துக்கோ வைச்சுக்கோ என்ற நிலை மாறுமோ? எதிர்பார்த்தவண்ணம்

நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு


நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு.
இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாற்று வெள்ளம்… திரும்பின

பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்? என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரைமணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக்
கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை,
நீயே சொல்லு என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே
தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்? என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.

அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால்
அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம்
செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான்
எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத்
தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம்
யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம்
முழுவதையும் செலவிடுகிறார்.

நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத்
தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்.

Friday, October 22, 2010

வேறயென்ன? வேறயென்ன?


அம்மா அப்பா அருகில் இருந்தால்
தொலைபேசியில்
அளவாகப்பேசுகிறாய்....

வேறயென்ன? வேறயென்ன?
என்று அடிக்கடிகேட்டு
தொடர்பை துண்டிக்க நினைக்கிறாய்...

யாருமே இல்லையென்றால்
குழந்தையாய் குதுகலித்து
எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறாய்.

ஆனால் பெருச்சாளிகள் அப்படியல்ல!


காதலிக்காமல் இருப்பதைவிட, காதலித்து காதல் தோல்வி கண்டு, முதல் காதலையே நினைத்து நினைத்து உருகுவதும், கண்ணீர் வடிப்பதும் எவ்வளவோ சுகமானது என்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா? சட்டையை மாற்றுவது போல காதலிகளையும் ஏன் மனைவியையும் மாற்றும் மனிதர்களை நாம் பார்க்கிறோம் இல்லையா!

ஆனால் பெருச்சாளிகள் அப்படியல்ல, PRIARIE VOLES என்ற இனத்தைச் சேர்ந்த பெருச்சாளிகளில் ஆண் பெருச்சாளிக்கு ஏகபத்தினிவிரதம் என்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் க்டுபிடித்துள்ளனர். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று இந்த ஆண் பெருச்சாளி செல்வரம் தந்துவிடுகிறதாம். அது மட்டுமல்ல, இன்னொரு பெண் பெருச்சாளி க்கும் பார்வையை வீசினால், ரூர்ப்பனகை மூக்கை இராமன் அறுத்தது போல, பாய்ந்து தாக்கி விரட்டிவிடுகிறதாம். ஆனால் ஒரு நிபந்தனை, தனது காதலியுடன் ஒருமுறையாவது உடலுறவு கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்காவின் புளோரிடா அரசுப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த PRIARIE VOLES இனப் பெருச்சாளிகளின் காதல் விவகாரத்தை விரிவாக ஆராய்ந்தார்கள். இந்த ஆண் பெருச்சாளி, பெண் பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளும் போது, Dopamine என்ற ஒரு ரசாயனப்பொருள் அதனுடைய முளைக்குள் பெருமளவில் சுரகாகிறதாம். இந்த ரசாயனப் பொருள் தான் ஆயுள் முழுவதும் அழியாத காதல் பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறதாம்.

இது உண்மைதான் என்று நிரூபிக்க முற்பட்டார் ஆய்வாளர் குழுவின் தலைவர் BRANDON ARAGONA, அவர் இந்த Dopamine ரசாயனப்பொருளை பெண்பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளாத ஒரு பெண் பெருச்சாளியுன் உடம்பில் ஊசி மூலம் செலுத்தினார். அதன் பிறகு இந்த ஆண் பெருச்சாளிக்கு பெண்வாசனையே பிடிக்காமல் போய்விட்டது. பெண்பெருச்சாளிகளைக் கண்டால் ஓடி ஒதுங்க ஆரம்பித்தது.

இது எதனால் இந்த Dopamine ரசாயனப்பொருள், பெருச்சாளியின் மூளையில் உள்ள nucleus accumbens என்ற பகுதியை மாற்றியமைத்து விடுவிதது. இந்த மாற்றம் சாதாரண மாற்றமல்ல. அதிரடி மாற்றம். எப்படி என்றால், காதல் ஜோடியைப்பிரித்து, ஆண் பெருச்சாளிக்கு முன்னால் இன்னொரு பெண் பெருச்சாளியை நிறுத்திய போது, அதைக் கண்டதுமே ஆண் பெருச்சாளியின் மூளையில் Dopamine சுரந்தது. ஆனால், அது வேறு நரம்புச் சுற்று வழியாகத் திசைமாறிச் சென்று விட்டது. இதன் விளைவாக, புதிய பெண்ணை ஆண்பெருச்சாளி அலட்சியப்படுத்தி விட்டது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் Nature Neuroscience என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சரி, மனிதர்களுக்கும் இப்படிப்பட்ட Dopamine ரசாயனப்பொருள் சுரக்குமானால், கற்பழிப்புக் குற்றங்களை இல்லாமல் போகுமல்லாவா?இதைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார் BRANDON ARAGONA. பெருச்சாளி போலத்தான் மனிதர்களுக்கும் மூளை அமைப்பு இருக்கிறதாம். ஆனால், ஒரேஒரு வித்தியாசம், மனித மூளைமாகப்பெரியது. அது, வெவ்வேறு நெருக்குதல்களுடன் இயங்குகிறது. அதனால் தான் காதலியைக் கைவிடுவது, மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணத்தில் மயங்குவது என்பது போன்ற சமூகக் கற்றங்கள் அதிகரிக்கின்றன

எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்டேன்.

வாலைத் தூக்கிக்கொண்டு
ஓடி வந்த அணில்,
திறந்த கதவினுள்
எட்டிப் பார்க்கிறது.

பரணில் ஒளிந்திருந்த பூனை
திடுக்கென இறங்கி ஓடியது.
'குட்டி போட்டுவிடப் போகிறது'
அஞ்சினாள் அம்மா.

சமையல் மேடையில்
அடிக்கடி உலவுகின்றன
பல்லிகள்.

குளியலறையிலிருந்து
குதித்துத் தாவுகின்றன
தவளைக் குஞ்சுகள்.

கரப்பான்களுடன்
அவ்வப்போது நிகழ்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம்.

ஒட்டடை தட்டும்போதெல்லாம்
தப்பிவிடுகிறது சிலந்தி.

ஒரு படையெடுப்பு
எப்படி இருக்கும் என
எறும்புகள் கற்பிக்கின்றன.

எறும்புகள் மொய்த்த முறுக்குகளை
வெயிலில் காயவைத்தேன்.
கவ்விச் சென்றது காக்கை.

மின்விசிறியை ஏமாற்றி,
என்னை எங்கே, எப்படி
கடிக்க வேண்டும் எனக்
கொசுக்களுக்குத் தெரியும்.

இவற்றிடமிருந்து தப்பிக்க,
அனைத்து ஜன்னல், கதவுகளை
மூடி வைத்தேன்.
மூச்சு முட்டியது
வியர்வை பெருகியது.

எல்லாக் கதவுகளையும்
திறந்துவிட்டேன்.

முக்கியம்தான்
என் மூச்சு எனக்கும்
அதன் மூச்சு அதற்கும்.

Thursday, October 21, 2010

Believe in destiny

1) First things first. Do not pile up the issues and solve them immediately
2) Use the intuition. Practice the analytical skill with intuition to decide the course
3) Utilize the opportunities. Opportunities are rare, be alert and utilize them in full extend
4) Be courageous. Bold enough to express the right thing and be impartial
5) All are not same. Don’t expect people to be perfect and allow them to learn
6) Don’t expect kindness. World will never be kind to us and don’t expect any favour
7) Don’t confuse. Balance the life and be organized. Today’s life should not be a worry for tomorrow
8) Quality in life. Life should be quality driven and not money driven
9) Principles centered life. Live with the principles and practice them with characters
10) Believe in destiny. Noting can happen except what has been destined (by God)

நானே முடிந்தாலும்

என் தேடல்கள் முடிவதில்லை
நானே முடிந்தாலும்

சில தேடல்கள் முடிவதில்லை
தேடுவது கிடைத்தாலும்
சில கேள்விகள் நிறைவதில்லை
பதில்கள் தெரிந்தாலும்
சில நாட்கள் முடிவதில்லை
சூரியன் மறைந்தாலும்
சில நினைவுகள் அழிவதில்லை
இதயமே அழிந்தாலும்

உயிருக்குள் உறைந்தவைகள்
உலகமே அழிந்தாலும்
ஒரு நாள் மீண்டு வரும்
வரும் நாளை நோக்கிய இப்பயணம்
வாழ்நாளும் தாண்டி வாழும்

என் தேடல்கள் முடிவதில்லை
நானே முடிந்தாலும்

நீ விட்டுச்சென்ற வாசனைகளில் மிச்சமிருக்கிறது எனது வாழ்க்கை.!

உன்னை பார்த்த பிறகும்..
ஒளிந்து கொள்கிறது..
என் மனது உனக்குள்ளும்..
உன் மனது எனக்குள்ளும் !

நீ விட்டுச்சென்ற வாசனைகளில்
மிச்சமிருக்கிறது எனது வாழ்க்கை.!

உன் கண்ணை ஒட்டிய கண்ணீருக்குள்
இன்னும் மின்னுகிறது
முன்னம் உள்ள புன்னகை !

என்னில் காணமல் போன கனவுகள்
தேடிக்கொண்டிருக்கின்றன
உனது நினைவுகளை..!

நீ கேட்காமல் விட்டுசென்ற
என் வார்த்தைகள்
முட்டிமோதிகொள்கின்றன
என் வீட்டு சுவர்களில்...!

எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்...

அரவணைத்துக் கொள்! அன்பே
அரவணைத்துக் கொள்!

புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்
அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்

ஆசைப்படு!
அதிகாரத்தோடு கேட்டுக்கொள்
மோகப் படு!
முடிந்தவரை முத்தமிட்டுக்கொள்

உன் கரம் மட்டும் அறிந்த
என் நெஞ்சத்தை
உன் மார்பு கொண்டு பழுது பார்

விதைத்துக் கொள்!
விளைய விடு!
மேய்ந்து கொள்!
மீதம் வைக்கதே!

அங்கம் அனைத்தும் அடக்கி விடு!

ஆண்மை கொள்! பெண்ணே
ஆண்மை கொள்

என் ஆயுள் முழுவதும்
உன் அங்கம் மட்டும் பணி செய்ய!

மோகப் புரட்சி செய்!
நீயே தொடங்கு!
நீயே முடி!

சேர்த்துக் கொள்! செப்பனிடு!
படர்ந்து கொள்! பறக்க விடு!

என் விரல் கொண்டு
உன் உடல் உழுது கொள்!

என் உதட்டு வரிகளில்
உன் உதடுகளால் எழுதிக் கொள்!

உன் விரல்களில்
என் தலை முடிகளை தரம் பார்!

உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..
என் வீரத்தை பிடுங்கிக் கொள்!

அடைத்துக் கொள்!
என்னில் உன்னை...
உன்னில் என்னை...

என் சுவாசப் பைகளில்
உன் வாசத்தை மட்டும் நிரப்பு!

உன் இடையினை என் கரங்களால்
கட்டிப் போடு!

உன் தீண்டல்களில்
என் தோல்களை தூய்மைப்படுத்து!

உன் உரசல்களில்
என் ஆண்மையை தீயுட்டு!

ஆக்கிரமித்துக் கொள்! அழகே
ஆக்கிரமித்துக் கொள்!

உன் சிருங்காரத்தில்
என்னை சிறைப்படுத்து!

உன் பாதம் தொட
என் சிரம் தாழ்த்தி சினுங்க வை!

உன் இடை சுற்ற
என் கரம் வேண்டு!

உன் கனவுப் பொய்களை
என்னில் மட்டும் நிஜமாக்கு!

எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்
என்னிலிருந்து,
உன்னைத்தவிர...

சே! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்...?

எண்ணிக்கை

சே! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்...?

இப்படி எனது எண்ணிக்கையை நான் எப்போதுமெ சலித்துக்கொண்டதில்லை. சிறு வயதிலிருந்தெ எனது எண்ணிக்கை பழக்கம் துவங்கியதாக பாட்டி அடிக்கடி கூறுவாள். இரவு முழுவதும் வானத்து நட்சத்திரங்களை எண்ணுவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதையும், அரிசியில் கலந்து போன பருப்புகளை எண்ணிக்கையோடு சேர்ப்பதையும் அனைவரும் வீட்டிற்க்கு வந்து அதிசயமாக பார்த்து சென்றதாக் மிக பெருமையோடு சொல்லிக்கொண்டிருப்பள்.

அப்பாவிற்க்கோ தனது பையன் இப்படி சமர்த்தக இருந்ததில், அனைவரிடமும் தம்பம் அடித்து கொள்வதையும், வீட்டிற்கு வரும் அனைவரிடமும் சவால் விடுவதும், என்னிடம் பல விதமான எண்ணிக்கைகளின் புதிர்களை கேட்டும் நான் சொல்லும் பதில்களுக்கான எதிர் சவால் விடுவதுமாக இருந்தார்.

ஐந்தாம் வகுப்பு கூட முடிக்காத எங்கள் கிராமத்தில் யாருக்கும் எதிர் சவால் விடுவதில் தைரியம் இல்லை. இதனால் தான் என்னவோ என்னை மிக எளிதாக பக்கத்தில் உள்ள ட்வுன் பள்ளியில் இடம் கிடைத்தது. எங்கள் ஊர் தலைவர் தான் பள்ளிகூடத்தில் கொண்டு சேர்த்தார்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக பிடித்த மாணவனக இருந்ததில், பல பையன்களின் அன்புத்தொல்லைகளை தாங்க வேண்டியிருந்த்தது. சில கடைசி பென்ச் மாணவர்கள் மட்டும் என்னை கவிழ்பதில் சமயம் பார்த்து கொண்டிருந்தனர்.
அன்று எந்த ஆசிரியரும் வராத காரத்தினால் எல்லொரையும் பி. டி கிளாசிற்க்கு வருமாறு அறிவுப்பு வந்திருந்தது. கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. இன்று நிச்சயமாக முத்துசாமி சொன்ன பந்தயதில் ஜெயித்து விடலாம். பந்தயம் என்னவென்றால் வேப்ப மரதிலிருந்து கீழ் விழும் இலைகளை அதிகமான எண்ணிக்கையில் யார் எடுப்பது என்பது தான்.

முத்துசாமி, கணேசன், தங்க ராசு எல்லோரும் சேர்ந்து கொண்டோ ம். முத்து சாமி தான் எண்ண ஆரம்பித்திருந்தான்.ஐம்பது, ஐம்பத்தி ஒன்று,.....ஒரே மூச்சில் நானும் எண்ண ஆரம்பித்திருந்தேன். என்னை சுற்றியிருந்த எல்லா சத்தங்களும் அடங்க தொடங்கின. எனது ஒரே குறியாக இலைகளை எண்ணுவதிலேயெ இருந்தது.

லேசாக இருட்டிக்கொண்டு வருவாதாக எனக்கு பட்டது. எப்போது படுத்தேனொ தெரியாது. முகத்தில் வெயில் சுள்ளென்று அடிக்க வாட்சுமேன் எழுப்பிய போது தான் தெரிந்தது காலை ஆகி விட்டதென்று. வாட்சுமேன் பக்கத்தில் அம்மாவும் நிற்பது தெரிந்த போது தான் விசயம் தெரிந்தது. வீட்டில் என்னை நேற்று முழுவதும் தேடியிருக்கவேண்டும். அந்த கவலை அம்மாவின் வீங்கிப்போன முகத்திலெ தெரிந்தது. இரவு முழுதும் அழுதிருக்கவேண்டும். அம்மா என்னை அணைத்துக் கொண்டு அழைத்துப் போனாள். மஞ்சள் வாசம் வீசியது.

அப்போது தான் சட்டென்று நினைவிற்க்கு வந்தது. 1887 நேற்று நான் எண்ணிக்கையில் விட்ட இலைகள். நிச்சயமாக முத்துசாமியொ, தங்கராசோ இந்த எண்ணிக்கையை அடைந்திருக்க முடியாது.

இப்படியெ எனது எண்ணிக்கை பயணம் கல்லூரி வரை தொடர்ந்தது. கல்லூரியில் பலரது காதலுக்கு எனது எண்ணிக்கை பயன் பட்டது. தனது காதலி எத்தனை தடவை மஞ்சள் புடவை போட்டிருந்தால் என்பதில் இருந்தது அவள் எத்தனை தடவை நாக்கு கடித்தாள் என்பது வரை என்னிடமிருந்து எண்ணிக்கை கணக்குகள் சென்று கொண்டிருந்தன.

அன்றும் அப்படித்தான் யாருடையொ காதலியின் ஏதோ எண்ணிக்கையை சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சரியாக கேட்காமல் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்ததால் எரிச்சலடைந்து சற்று சத்தமாகவெ சொல்லிவிட்டேன். திடீரென என் பின்னாலிருந்து ஒரு செருப்பு என் முதுகை தாக்கியது. திரும்பி பார்த்தேன். என் கண்கள் அப்படியெ நின்று போனது. நான் சொன்ன ஒரு எண் அவளுடைய எதோ ஒரு அளவு எண்ணிக்கையில் ஒத்து போனதில், அவளுடய செருப்பு என் மேல் விழுந்திருக்கிறது. மேலும் அவள் என்னை எதேதோ சொல்லி என்னை திட்டி கொண்டிருப்பதையும், எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதையும், நான் நினைவுக்கு வந்த பிறகெ தெரிந்தது. மொத்தமாகவெ என்னை அவளிடம் இழந்திருந்தேன்.

பிறகு மகேந்திரன் சொல்லிதான் அவள் பெயர் மதுமதி என்பதும், அவள் இந்த கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கிறாள் என்பதும் தெரிந்தது.பிறகு அவளை நான் எனது எண்ணிக்கை புலமை மூலம் அசத்தியதையும், அவள் என்னுடன் தனது வீட்டை விட்டு வந்ததையும், அவள் வீட்டார் திரும்பவும் என்னை தேடி வந்து கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதையும் எழுதுவதற்க்கு குறைந்தது நாற்பது வரிகளவாது தேவைப்படும். இப்போது வேண்டாமே...

இதோ கல்யாணமாகி ஆறு மாதங்களாகி விட்டது. மது என்னுடன் மிக சந்தோசமாகவே இருக்கிறாள். முத்துசாமி, தங்கராசு, கணெசன், மகேந்திரன் நம்மை பார்ப்பதற்க்காக வந்திருக்கிறார்கள். பழைய விசயங்களை நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

மறு நாள் காலை எழுந்தவுடன், நீச்சல் குளம் செல்வதென முடிவு செய்தோம். முத்துசாமி தான் கிராமத்தில் நான் தான் எப்பொதும் அதிக நேரம் தண்ணிரீல் இருப்பேன் என்றும், எண்ணிக்கையில் ஒரு தடவை 999 வரை சென்றதாகவும் ஞாபகப்படுத்தினான். எனக்கு பெருமையாக இருந்தது. இன்றும் அதெ போல் தண்ணீரில் யார் அதிக நேரம் மூழ்கி இருக்கபோவதென பந்தயம் செய்து கொண்டோம்.

மார்கழி மாதமாக இருந்ததில் நீச்சல் குளத்தில் அதிகம் பேர் இல்லை. நாங்கள் எங்கள் எண்ணிக்கையை ஆரம்பித்தோம். இந்த தடவை கணேசன் எண்ண ஆரம்பித்திருந்தான். 15, 16, 17, ...

நானும் எண்ணிக்கையை ஆரம்பித்தென். முதலில் கொஞ்சம் மூச்சையடைத்து, இருந்தாலும் எனது எண்ணிக்கையை தொடர்ந்த்து கொண்டிருந்தேன். 960...., 989.....................................999, 1000, 1001, 1002........... மிகவும் சந்தோசமாக இருந்தது. நிச்சயமாக வேறு யாரும் இவ்வளவு நேரம் இருந்திருக்க முடியாது.

வீட்டிற்க்கு வந்த போது வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. நிச்சயமாக மதுவுடைய சொந்தங்களாக இருப்பார்கள். கடந்த இரண்டு மாதங்காளாகவெ இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவளை தேடி அவள் சொந்தகாரர்கள் வருவதும், போவதும்.
இந்த தடவை எங்கள் வீட்டில் இருந்தும் வந்திருந்தனர். மது கொஞ்ச அதிகமாகவே அழுதிருந்தாள். கண்களுக்கு கீழெ கருமை நிரம்பி.... இருந்தாலும் அழகாகவே இருந்தாள். அவள் அருகில் அவளுடைய மாமா பையன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தான். அவனைதான் மதுவுக்கு கட்டுவாதாக இருந்தது. ஆனால் நமது காதல் கல்யாணத்தில் எல்லாம் நின்று போனது. அதற்கு பிறகு இப்போது தான் இவனை பார்க்க முடிந்தது.

அவள் அழுகும் போது இவன் அவளின் தலையை கோதிவிடுவதும். அழுகை அதிகரிக்க அதிகரிக்க அவளை லேசாக அணைத்துக் கொள்வதுமாக இருந்தான். அவன் முகத்தில் அதிகப்படியான சிரிப்பு புதைந்திருந்தது.

என் தலைக்கு மேல் உள்ள குத்துவிளக்கு அணைந்து போயிருந்தது. நான் வாங்கியிருந்த எல்லா பரிசுகளையும் யார் யாரோ பார்த்துகொண்டிருந்தார்கள். வேன் வந்து விட்டதாக யாரோ கூறிய போது மது அதிகமாக கதறி அழுதாள். இப்போது அவன் மதுவை இருக்கமாக கட்டிக்கொண்டான்.

சே..! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்.

வேண்டும் கல்நெஞ்சம்!

காணும் காட்சியெல்லாம்
கேட்கும் செய்தியெல்லாம்
படிக்கும் இதழ்களெல்லாம்
தினந்தோறும் விபத்துகள்,
கொலை, கொள்ளை,
தீவிரவாதம்
மரணங்கள் மரணங்கள் மரணங்கள்
கேட்டுக் கேட்டு பார்த்துப் பார்த்து
மரத்துப் போனது மனசு

பட்டமரம் துளிர்க்குமா
மரத்துப்போன மனதில் கலக்கமா
கலங்கியது நெஞ்சம்
காணாத காட்சிகண்டு

குருத்துகள் சருகாகலாம்
வீணையும் விறகாகலாம்
மழலைகள் மரக்கரியாகுமா...

கண்முன்னில் காட்சியான
கரிமக் கவிதைகள்
வாழும்நாள் வரை வரைவின்மாறாத
வடுக்களாய் நெஞ்சில்

விழிகளில் விழுந்த துளிகள்
மாயுமா இல்லை காயுமா
இதயத்தில் கசிந்த காரம்
குறையுமா இனி மறையுமா

ஆறுதல் தேறுதல் எத்தனை நேரினும்
காலம் ஆற்றும் காயமா
எழுதும் மையிலும்
கண்ணீரின் கலக்கம்

நெருப்பிற்கோ நெஞ்சமில்லை
அறிந்திருந்தும் தெரிந்திருந்தும்
ஆபத்தில் கைவிட்டு
அழிவிற்குள் செலுத்திய அறிவோர்

படிப்பதற்கு சென்ற பிள்ளை
நொடிப்பொழுதில் இன்று இல்லை
பார்வையாளர் பரிதவிப்பே இதுவெனில்
பாசப் பெற்றோர் படும்பாட்டை என்சொல

ஒன்றல்ல இரண்டல்ல
ஒருநூறு ஒருசேர
மாண்டு மரப்பாய்ச்சி போல் காண
வேண்டும் கல்நெஞ்சம்!

Wednesday, October 20, 2010

புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.


தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..பெரிய கோயில் அளவுகோல்...எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள
உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நீ அவர்களோடு இரு...

1. யாரும் இறந்தகாலத்திற்குத் திரும்பச் சென்று புத்தம் புதியதாய் எதையும் ஆரம்பிக்க முடியாதுதான். ஆயினும், யாரும் இப்போதே இங்கேயே ஆரம்பித்துப் புத்தம் புதியதோர் முடிவை அடையலாம் - கார்ல் பார்ட்

2. சின்னஞ்சிறு காரியங்களிலும் உன் முழு மனதைச் செலுத்திச் செய். இதுதான் வெற்றியின் ரகசியம் - சுவாமி சிவஹானந்தா

3. நல்ல ஆரம்பமே பாதி வெற்றி - அரிஸ்டாட்டில்

4. இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது - நெப்போலியன்

5. சுயக் கட்டுப்பாட்டாலும், சுய ஒழுக்கத்தாலும் நம் குணநலனைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்ளலாம் - கிளென்வில் க்ளெய்ஸர்

6. நீ திட்டமிடத் தொடங்கிவிட்டால், அது பெரிய திட்டமாக இருக்கட்டும் - டொனால்ட் ட்ரம்ப்

7. கடவுளே! முயற்சி எனும் விலை கொடுத்தால், நீ எதை வேண்டுமானாலும் தந்துவிடுகிறாயே! - லியனார்டோ டா வின்சி

8. யார் உன்னை மேலும் சிறந்தவர்களாக்குகிறார்களோ, நீ அவர்களோடு இரு - ஓர் ஆங்கிலப் பழமொழி

9. நான் பிரார்த்திப்பது வெற்றி வேண்டும் என்றல்ல. திட நம்பிக்கை வேண்டும் என்றுதான் - அன்னை தெரசா

Monday, October 4, 2010

கார் ஓட டயரும் தேயும்

எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்

ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

கார் ஓட டயரும் தேயும்

சிகரெட் விரலளவு, சீக்கு உடலளவு

சைக்களுக்குத் தெரியுமா, பெட்ரோல் வாசனை

தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது

பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

முடியுள்ள போதே சீவிக்கொள்

பழகின செறுப்பு காலை கடிக்காது

மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே...

Friday, October 1, 2010

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா???

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next மீட் பண்றேன்...

(தி.மு) - (தி.பி)

(தி.மு) திருமணத்திற்கு முன்

(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

அவன்: ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.
அவள்: நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
அவன்: இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள்: நீ என்னை விரும்புகிறாயா ?
அவன்: ஆமாம், இன்றும், என்றென்றும்
அவள்: என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன்: அதைவிட நான் இறப்பதே மேல்
அவள்: எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன்: கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள்: என்னை திட்டுவாயா ?
அவன்: ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?
அவள்: நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின்
கீழிருந்து மேலே படியுங்க

Wednesday, September 15, 2010

வாழ்க்கையை தொலைத்து விட்டேன்!

சிறகொடிந்த பறவையின் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை!!!
இதயங்கள் கனத்திருந்தாலும் இதழளவில் புன்னகைப்பதால் தானோ எங்களுக்கு மென்பொறியாளர் என்று பெயர்!!!

அரை அடி இடைவெளியில்
ஆறுபேர் அமர்ந்திருந்தாலும்
அந்நியப்பட்டவர்கள் போல்
திசைக்கொருவறாக திரும்பியிருப்போம்!!!

விருப்பங்களுக்கேற்ற நீராகாரம்
விருந்தோம்பல் புரிய பணியாளர்கள்!
விடிய விடிய வேலை
விடிந்தபொழுதில் வீடுசேர்க்க வாகனம்!

அழையாவிருந்தாளியாய் ஆன்ஸைட் கால்கள்!
இன்னல்ப்படுத்தும் ஈமெயில்கள்!

இவ்வாறாக இயந்திரத்தனமாக சுழலும் எங்கள் நாட்கள்!

உள்ளத்தில் குடியிருக்கும் உறவுகளுக்குக்கூட தொலைப்பேசியில் தான் நலம்விசாரனை!

மணநாளுக்குக்குட மின்னஞ்சலில் வாழ்த்து பரிமாற்றிக்கொள்வர் மனைவியும் கணவனும்!

முகவரிகுக்கூட முகம் காட்ட முடியாத எங்களுக்கு பிறந்த நாளென்ன மணநாளென்ன? எல்லாமே மரண நாட்கள் தான்.

விடியுமுன் சென்று இருண்டபின் திரும்பும் மென்பொருள் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு வளர்த்த வேலைக்கார பெண்மணி தான்
ஈடுகட்டும் வாடகை தாய்!!!

பெற்றோரின் ஸ்பரிசம் கண்டதைவிட கரடி பொம்மையின்
கதகதகப்பில் உறங்கும்

எம்மிளம் பிஞ்சுகளின் தனிமைக்கு இந்த லட்சங்கள் ஈடாகுமா?

கை நிறையும் சம்பளத்தின் மறைவில் மனம் நிறையும் குறைகள் மண்டியிருக்கிறது!

நெஞ்சத்திலுதிக்கும் ஆசைகள் மஞ்சதிலுறங்கும் போது
மடிந்துதான் போகின்றன!!


கண்களில் தோன்றிய கனவுகள் யாவும் கண்ணீரில் மறைந்தன!

நித்திரைகள் நீண்டன நிறைவேறாத என் கனவுகளும் நீண்டன!

அன்று,வசதிகள் இல்லாத போது வாழ்ந்து கொண்டிருந்தேன்!

இன்று, வசதிகள் பெருக்கி விட்டேன், ஏனோ வாழ்க்கையை
தொலைத்து விட்டேன்!!!

Monday, September 13, 2010

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்..
நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து
விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக்கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச்
செல்லுங்கள்.. நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்செல்கிறீர்கள் என நினைப்பார்கள்..

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய்,
ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள்.
கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15.. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக
இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்
தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?

Thursday, September 2, 2010

Please Take Some Time To Read All these wonderful Quotes

1) Innaiku thoonguna nalaiku enthirikalam.aana naalaiku thoonguna inaiku enthirika mudiyuma????

2) Bus la collector-yae erinalum.. mudhal seetu driveruku than......

3) Cycle carrierla tiffen-a vechu eduthuttu pogalam Aana... Tiffin carrierla cycle-a vechu eduthuttu poga mudiyathu... ???

4) Ticket vangittu ulla ponna adhu cinema theater anna ulla poittu ticket vanginaa adhu operation theater.

5) Enna than meenuku neendha therinjalum adhala meen kolambula neendha mudiyadhu

6) iron boxla iron panna mudiyum ....ana pencil box la pencil panna mudiyuma?...........idhuthan valka........

7) Ne Enna than costly mobile vachirundhalum, Athula evalavu than recharge pannalum, unnalla unakku call panna mudiyathu..

8) cream biscuitla cream irukkum, ana nai biscuitla nai irukkuma?

9) puyalala karaya kadaka mudiyum.. karayala puyala kadaka mudiyuma

10) Oru erumbu nenacha 1000 yanaya kadikkum. Ana 1000 yana nenachalum oru erumba kooda kadikka mudiyadhu..

11) Quarter Adichittu Kuppura padukkalaam! Aana kupura paduthuttu quarter adikka mudiyathu...!!

12) Nee Evalavu periya dance master'a irundhalum un saavuku unnala aada mudiyathu

13) trainukku ticket vaangi platformla okkaralam ana platformukku ticket vaangi trainla poga mudiyadhu

14) ambalainga adi patta ambulance varum.. pombalainga adi patta pombulance varuma????

15) Ulagam theriyaama valandha avan veguly..Cricket theriyaama valandha avan ganguly....

16) Bus la ne erinallum bus un mela erinalum?., ticket vanga poradhu nee than?.

17) Evallavu than neechal therinjalum?. oru glass thanila neentha mudiyadu

18) kakka evalavu than karuppa irundhalum adhu podura muttai vellayathan irukkum?.. adhu pola kakka muttai evvalavu than vellaya irundhalum adhu la irundhu vara kutti karuppathan irukkam?.

19) Adyar anandha bhavanukku city ayiram branch irukkalam ana adyar allamaruthukku adyar leya ayiram branch irukkum?

20) Sirpi Kalla Uliyaala adicha that is "Kalai" But Namma Sirpiya Uliyaala adicha that is "Kolai"

21) Railway Stationla Police Station irukkum But Police Stationla railway station irukkathu

22) Yevalavu Dan Neechal Therinjalum Tumler thannila Neentha Mudiyathu.

23) Ennathan Naiku Nalu Kaal Irundhalum Athaala Kaal Mela Kaal Pottu Ukkara Mudiyathu

24) Mandaiya Pota Die Mandaila Pota Dye

25) Nee Enna Thaan Costly Mobile Vachiruthalum Adhula Evalavu Thaan Recharge Pannalum Unnaala Unnaku Call Panna Mudiyathu

26) Kosu Kadicha Yaanaikaal Varum But Yaanai Kadicha Kosukaal Varathu

27) Valkaikum Valukaikum Orea Vithyasam Onnumae Illatha Valkai Bore Adikum
Onnumae Illatha Valukai Glare Adikum

28) Policesikkum Porukikkum enna Vithyasam "Adi-Thadi" Senja Porukki
"Thadi-Adi" Senja Police

29) Trainnuku Ticket Vangi Platformla Ukkaralaam Ana
Platform Ticket Vangi Trainla Ukkara Mudiyathu

30) Ennathan Karatela Black Belt Vanginalum
Naai Thorathina Odi Thaan Aganum

31) Busla Nee Earunalum
Unnmalae Bus Earunalum
Ticket Vangaporadhu Nee Thaan

32) PAAL Kotinna Vera Paal Vaangikkalam
Arisi Kotinna Vera Arisi Vaangikkalam Aana
Thel Kotinna Vera Thel Vanga Mudiyuma?

33) Ticket Vangitu Ulla Poradu Cinema Theatre
Ulae Poitu Ticket Vangaradu Operation Theatre

34) Kaakaa Enna Thaan Karuppa Irundalum Adhu Podura Vellai Thaan
Muttai Enna Thaan Vellaiya Irundalum Athukulae irukura Kaakaa
Karupp Thaan

35) Iron Boxla Iron Pannalam Anna
Pencil Boxla Pencil Panna Mudiyathu

36) Cream Biscuitla Cream Irukkum Anna
Naai Biscuitla Naai Irukathu.

Wednesday, August 25, 2010

வங்கி (bank chennai)



வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

Ambulance- old


Ambulance- old

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்


சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகளுக்கு ரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்- 1925


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்-1925
இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது. இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. சென்னை மாநகரில் ஓடும் பக்கிங்கம் கால்வாய் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாகச் செல்கின்றது.

Esplanade, George Town, Chennai- 1910


Esplanade, George Town, Chennai- 1910

Pycrofts Road- 1890


Pycrofts Road- 1890
'Bharathi Salai' would make most people blink. They do not know where it is. But its old name Pycrofts Road is easily recognised. This road is said to be the abode of Saraswati, the Goddess of Learning. Name any book and you can get it here. School or college books unavailable anywhere in India can be bought at the bookshops on Bharathi Salai. If by chance a book is not available, they can immediately offer an alternative book in its place.

4. பாரிமுனை


5. பாரிமுனை- 1890

பாரிமுனை சென்னை மாந‌க‌ரின் முக்கியமான‌ வ‌ர்த்தக‌/வ‌ணிக‌ மைய‌மாகும். பாரிமுனை வடச் சென்னையில் உள்ளது. சென்னையின் வ‌ட‌க்கு க‌டற்க‌ரை சாலையும் எந்.எஸ்.ஸி.போஸ் சாலையும் ச‌ந்திக்குமிட‌த்தில் அமைந்துள்ள‌து பாரிமுனை. சென்னைத் துறைமுக‌த்தின் அருகில் அமைந்துள்ள‌ இப்ப‌குதி, ஆங்கிலேய‌ வர்த்த‌க‌ரான‌ திரு. தாம‌ஸ் பாரி என்ப‌வ‌ருக்குப்பின் இப்பெய‌ர் பெற்ற‌து. இவர், 1787ல் இ.இ.டி.பாரி என்கின்ற‌ நிறுவ‌ன‌த்தை இவ்விட‌த்தில் துவ‌க்கினார். இன்றுமுள்ள‌ இந்நிறுவ‌ன‌த்தின் த‌லைமை அலுவலகம் பாரிமுனையில் இருக்கின்ற‌து. மேலும், பாரிமுனையில் ஏராள‌மான‌ ம‌ற்ற‌ நிறுவ‌ன‌த்தின் அலுவ‌லக‌ங்க‌ளும், க‌டைக‌ளும் உள்ள‌ன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ம் பாரிமுனையில் அமைந்துள்ள‌து. பாரிமுனையின் த‌பால் குறியீட்டு எண் 600001.

3. மயிலாப்பூர்- 1906


3. மயிலாப்பூர்- 1906

சென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. தொலமியின் நூலில் இது மைலார்பொன் (Mylarphon) எனக் குறிப்பிடப்பட்டு, இது வளம் மிக்கதும் முக்கியத்துவம் கொண்டதுமானதுமான ஒரு இடம் எனக் கூறப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போத்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.

சமணம்
தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் சமணம் எழுச்சியுற்று இருந்தபோது, மைலாப்பூரிலும் இச்சமயம் செழிப்புற்றிருந்தது. இப்போது சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இங்கே நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மயிலையிலிருந்த இந்த நேமிநாதர் மீது திருநூற்றந்தாதி என்னும் நூலை அவிரோதியாழ்வார் என்பவர் இயற்றியுள்ளார். இது தவிர திருக்கலம்பகம், மயிலாப்பூர் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்பனவும் இப் பள்ளி தொடர்பில் எழுந்தவை ஆகும். இச் சமணக் கோயில் தொடர்பான தொல் பொருட்கள் பலவும் சாந்தோம் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்து சமயம்
இப்பகுதியில் நீண்டகாலமாகவே இந்து சமயத்தின் சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் சிறப்புற்று விளங்கின. பண்டைக்காலக் கரையோர மைலாப்பூரில் சிவனுக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, இன்றைய கபாலீஸ்வரர் கோயிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. போத்துக்கீசர் இக்கோயிலை அழித்துவிட்டனர். இன்றைய கபாலீஸ்வரர் கோயில் 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளை அண்டிக் கட்டப்பட்டதாகும்.

கிறிஸ்தவம்
இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான சென், தோமஸ் கி.பி 52 இல் கேரளாவுக்கு வந்து அங்கே சமயப் பணி செய்தபின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றும், கி.பி 72 ஆம் ஆண்டில் சென்னை அருகில் உள்ள சின்ன மலை (Little Mount) அருகே கொல்லப்பட்டார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இவரது உடல் மயிலாப்பூருக்கு எடுத்துவரப்பட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. இவ்விடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அண்ணா சாலை- 1905


2. அண்ணா சாலை- 1905

மெரினா கடற்கரை


1. மெரினா கடற்கரை

Monday, August 23, 2010

குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டுமே!

தக்க வயதுக்கு முன்பே பள்ளியில் சேர்ப்பதால், நம் சின்னஞ்சிறு குழந்தைகளின் குழந்தைப் பருவம் எங்கோ காணாமல் போகிறது. இன்று அவர்கள் பந்து விளையாடுவது மண்ணில் வீடு கட்டுவது போன்றவற்றை விட்டு விட்டு கிளிகள் போல் பெரிய பெரிய நர்சரி ரைம்ஸ், பாடங்கள், கதைகள் போன்றவற்றை (அவற்றின் அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும்) மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளது!

தங்கள் குழந்தைகள் ஆங்கில ரைம்ஸ் சொன்னால் பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்று அந்த பிள்ளைகளின் குழந்தைத்தனம் முடிந்து வருகிறது. அவர்கள் வயதுக்கு மிஞ்சிய புத்திசாலியாகிறார்கள்.

இதற்குக் காரணம் தக்க வயதுக்கு முன்பே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதுதான். தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தாய்மார்கள் 2-3 மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். எல்லாக் குழந்தைகளும் ஓடும்போது, ஏன் நம் குழந்தை மட்டும் பின்தங்க வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.

சில பள்ளிகளைத்தவிர பெரும்பாலான பள்ளிகள் பணம் சம்பாதிக்கும் வியாபார கூடங்களாக உள்ளன. அந்த பள்ளிகளில் உட்காருவதற்கு கூட சரியாக இடம் இல்லமல், அளவுக்கு அதிகமாக குழந்தைகளை சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வயதில் குழந்தைகளுக்கு தேவையான படிப்பை நீங்களே விளையாட்டாக வீட்டிலேயே சொல்லித்தரலாம். நிச்சயமாக குழந்தைகள் அதை நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.

குழந்தைகளின் மனம் அழகானது. அவர்களை சரியான வயதுக்கு முன்பே கட்டுப்பாடுகளில் கட்டிப் போடாதீர்கள். அவர்கள் படிக்கும் பள்ளி 5-ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதி கொண்டதாக இருப்பினும், வீட்டின் சுதந்திரத்துக்கு ஈடு இணையில்லை. அவசரமாகக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து நாம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடை போடுகிறோம். இதனால் குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.

படிப்பதற்கு பல ஆண்டுகள் உள்ளன. ஆனால் குழந்தைப் பருவம் விரைவில் முடிந்துவிடும். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டுமே!