Tuesday, October 26, 2010

வாழ்வு


காலந்தவறி அசைந்தாடி வரும்
ஓசி பஸ்சும்
சளைக்காது
மூசிவீசும் குளிர்க்காற்றும்
நெஞ்சினிலுள் இறங்கும்
கோபக் கவளங்களாய்

வெறுப்பும் சலிப்பும்
குழைத்தெறியும்பொழுதில்
என்றேனும் ஒருகால்
உருகாதோ உறைபனி

மதுவருந்தி
மயங்கும் வெள்ளியிரவுகளில்
பலவீனங்களுடன்
மனிதர்களை நேசிக்க
நெஞ்சு கிஞ்சிக்கும்

பாடப் புத்தகங்களின்
பக்கங்களைப் புரட்டவே அலுப்புறும்
நான்
மாந்தர்களைப் படித்தல்
நடவாதென
நினைவு ததும்பிச் சிரிக்கும்

சுரங்கப் பாதையில்
வகுப்புகளுக்காய்
நடக்கையில்
தென்படும் பெண்களெல்லாம்
தேவதைகளாக மிதக்கின்றனர்

அறிவும் தெளிவும்
தெறித்துச் சிதற
அவர்கள் பேசுகையிலும்
ஆண்களுண்டாக்கும்
காயங்களே
பேச்சிடைப் பொருளாகின்றன

முற்போக்குகளின்
பிரதிநிதியாய்
சமரசங்களற்று
அலையும் இளைஞன்
பட்டத்துடன்
முகவரியற்றுப் போவது
நாளைய விந்தை

அவ்வவ்போது கற்றல்
வன்முறையாய்
சிந்தனையடுக்குகளை
சிதைத்துப்போக
நெருங்குகிறது பரீட்சை

தேடலில்லா
கவிதை போல்
காலத்தை
அசட்டை செய்து
நகர்கிறது வாழ்வு.

No comments: