Friday, October 22, 2010

எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்டேன்.

வாலைத் தூக்கிக்கொண்டு
ஓடி வந்த அணில்,
திறந்த கதவினுள்
எட்டிப் பார்க்கிறது.

பரணில் ஒளிந்திருந்த பூனை
திடுக்கென இறங்கி ஓடியது.
'குட்டி போட்டுவிடப் போகிறது'
அஞ்சினாள் அம்மா.

சமையல் மேடையில்
அடிக்கடி உலவுகின்றன
பல்லிகள்.

குளியலறையிலிருந்து
குதித்துத் தாவுகின்றன
தவளைக் குஞ்சுகள்.

கரப்பான்களுடன்
அவ்வப்போது நிகழ்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம்.

ஒட்டடை தட்டும்போதெல்லாம்
தப்பிவிடுகிறது சிலந்தி.

ஒரு படையெடுப்பு
எப்படி இருக்கும் என
எறும்புகள் கற்பிக்கின்றன.

எறும்புகள் மொய்த்த முறுக்குகளை
வெயிலில் காயவைத்தேன்.
கவ்விச் சென்றது காக்கை.

மின்விசிறியை ஏமாற்றி,
என்னை எங்கே, எப்படி
கடிக்க வேண்டும் எனக்
கொசுக்களுக்குத் தெரியும்.

இவற்றிடமிருந்து தப்பிக்க,
அனைத்து ஜன்னல், கதவுகளை
மூடி வைத்தேன்.
மூச்சு முட்டியது
வியர்வை பெருகியது.

எல்லாக் கதவுகளையும்
திறந்துவிட்டேன்.

முக்கியம்தான்
என் மூச்சு எனக்கும்
அதன் மூச்சு அதற்கும்.

No comments: