Friday, February 25, 2011

புதிய கல்வி முறை


எழுத்தறிவு என்பது பள்ளிக் கல்வியின் ஆதாரமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் எழுத்தறிவு என்பது முதியோர் கல்வியுடன் மட்டுமே பேசப்படும் பொருளாகிவிட் டது. உலகில் உள்ள எழுத்தறிவற்ற மக்கட் தொகையில் பெரும் பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் இந்தியாவில் தொடர்ந்து எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கை நீடிக்கிறது?இதற்குக் காரணம் இந்தியாவில் ஆரம்பக் கல்வி கற்ற பின்னரும் குழந்தைகளின் எழுத்தறிவின்மை தொடருவதுதான். குழந்தைகள் எட்டாண்டு கால ஆரம்பக் கல்வியை முடிக்காமலேயே வெளிவருவதாலும், ஆரம்பக் கல்வியை விட்டு வெளி வந்த பின்னர் படிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவதாலும் மீண்டும் எழுத்தறிவின்மை நிலைக்கே சென்றுவிடுகின்றனர். எழுத்தறிவு பெற்ற குழந்தைகளிடமும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் பள்ளிக்கூடம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்காத குறையுள்ளது. படிக்கும் பழக்கம் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வுடன் செயல்படவும் உதவிடும் என்பதை உணர்பவர்கள் மிகக் குறைவு.

பள்ளிக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வில் அவர்களின் படிக்கும் திறன் மிகவும் குன்றியிருப்பதும், அவர்களுக்கு அதற்கான பயிற்சியே கொடுக்கப்படுவதில்லை என்பதும் வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதைச் சரி செய்வதற்கு பள்ளிக் கூட அளவில் தக்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில், புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டமே செயலற்றுப் போய்விடும். கற்றுக் கொடுக்கும் முறையில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும்.

பழைய கற்பிக்கும் முறையிலிருந்து ஆசிரியர்கள் விடுபட வேண்டும். அன்றைய சமூக, கலாச்சார சூழலுக்குப் பொருந்திய கற்பித்தல் முறை இன்றைய காலச் சூழலுக்கு நிச்சயம் பொருந்தாது. அன்று மிகச் சிறுபான்மையராக இருந்த மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. இதனால் ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு எழுத்தின் வடிவத்தையும், அதன் ஒலி நயத்தையும் அவசரமின்றி வருடக் கணக்கில் சொல்லிக் கொடுத்தார். கடுமையான பயிற்சியுடன் தேவைப்படும் போது தண்டனையும் கொடுக் கப்பட்டது. அன்றைய கல்வி முறையைப் பாராட்டிடும் சிலர், அன்று குழந்தைகள் பற்றி இருந்த கண்ணோட்டம் வேறு, இன்றிருக்கும் கண்ணோட்டம் வேறு என்பதை உணர்வ தில்லை. மேலும் அன்று கல்வி பெரும்பான்மையோருக்கு மறுக்கப்பட்ட சூழலுக்கும், இன்று கல்வி பரவலாக்கப்பட்டுள்ள சூழலுக்கும் உள்ள மாற்றத்தையும் நாம் உணர வேண்டும். அன்றைய கல்வி முறை குழந்தைகளின் இயல்பான சுபாவத்தையும், தனித்துவமான திறமைகளையும் மதிக்கத் தவறியது.

புதிய கல்வி முறை

மொழிகளைப் பயிலுவதற்கு குழந்தைக ளுக்கு இன்று புதிய யுக்திகளும் வசதிகளும் உள்ளன. குழந்தைகளின் மனோபாவத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆய்ந்தறிய வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடம் இயல் பாகவே உள்ளது என்ற அடிப்படையில்தான் இன்றையக் கல்வி முறை அமைந்துள்ளது. இளம் பருவத்திலேயே அவர்களுக்கு புத்த கங்களுடனான உறவை உயிரோட்டமுள்ள தாக, அர்த்தமுள்ளதாக உருவாக்கிட வேண்டும். இல்லையேல் அவர்களின் எழுத்தறிவு பயனற்றதாகப் போய்விடும். அவர்களை அறிவு மற்றும் உணர்ச்சிப் பூர்வமாக வளர்த் தெடுக்க முடியாது.

பள்ளிகளில் பாடங்களை எந்திரகதியாக உரத்த குரலில் படிக்கும் குழந்தைகள், அவற்றின் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்து புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் வருவதில்லை. குழந்தைகளால் பாடங்களை அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் அப்படியே மனனம் செய்து ஒப்புவிக்க முடிகிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முன்னாள் உறுப்பினர் சின்ன சாக்கோ ஒரு முறை ஒரு வகுப்பறையில் மாணவனை பாடத்தை வாசிக்கச் சொன்னதும், அவன் உடனே எழுந்து நின்று “புத்தகத் துடன் படிக்கவா? புத்தகம் இல்லாமலேயே படிக்கவா?” என்று கேட்டது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. கற்பித்தல் முறை களில் எந்த மாற்றமும் இல்லாமல் நம் பள்ளிகள் மியூசியங்கள் போல் இருப்பதை சின்ன சாக்கோ சுட்டிக் காட்டுகிறார். பழமையைப் பாதுகாப்பதில் நம் பள்ளிகள் கவனமாக இருக்கின்றன என்கிறார். இதனால் நாம் மிகப் பெரிய இழப்பிற்கு உள்ளாகிறோம்.

ஒரு ஜனநாயக நாட்டில் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள பொது மக்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அன்றாட சமூக, அரசியல் பிரச்சனைகள் சம்பந்தமாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை வெளியிடுவது என்பது மிகவும் தேவையான ஒன்றாகும். விடு தலின்றி எல்லோரும் கருத்து தெரிவிப்பது என்பது கூட்டு சிந்தனைக்கும், முடிவுக்கும் இட்டுச் செல்லும். இன்றைய பரந்த உலகில் எழுத்தறிவு என்பது முக்கியமான ஆயுதமா கும். படிப்பறிவு வெறும் திறன் மட்டுமல்ல, அதுவொரு கலாச்சார அடையாளமும் ஆகும். புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நம்மைச் சுற்றி நடப்பவைகள் பற்றிய தெளிவானபார் வையைப் பெற முடியும். எனவே புத்தகங்களுடனான பரிச்சயத்தை இளம் பருவத்திலேயே வளர்ப்பது ஜனநாயகம் வெற்றியுடன் செயல் படுவதற்கு வழி வகுக்கும். படிப்பிற்கு இத்தகு முக்கியத்துவம் இருப்பதால் இப்பழக்கத்தை இளம் பருவத்தில் ஒரு திறனாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிக்கும் மனோபாவத்தை சிறு வயதில் கற்றுக் கொடுப்போமேயானால் அது வாழ்நாள் முழுவதும் பயன்படும் திறனாக அமையும். ஜனநாயகக் கடமைகளை ஆற்றிடவும் உதவிடும். இதை மனதிற் கொண்டு கற்பித்தல் முறைகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். வெறுமனே புத்தகங்களை எழுத்துக் கூட்டி வாசிப்பதைத் தாண்டி, வார்த்தைக ளின் அர்த்தத்தை புரிந்து படிக்கும் அளவிற்கு குழந்தைகளின் திறனை வளர்த்தெடுக்க வேண்டும். இது வெற்றி பெற, தரமான புத்தகங்களும், குழந்தை இலக்கியங்களும் உருவாக்கப்பட வேண்டும். புத்தகங்கள் குழந்தை கள் நேசிக்கின்றவைகளாக இருக்க வேண் டும். குழந்தைகளின் உள்ளார்ந்த ஆர்வத் தைத் தூண்டும் விதமாகவும், அவர்களை சமூகத்துடன் இணைக்கும் படியாகவும் அமைய வேண்டும். புத்தகங்கள் சரியான சமூகப் பார்வையினைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் வாழும் சூழலில் உள்ள சமூக, கலாச்சார பன்முகத் தன்மைகளைக் கொண்டாடும் விதமாக இருக்க வேண்டும். குழந்தைகளை அன்புடன் அரவணைத்துக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் வேண்டும். ஆசிரி யர்கள் படிக்கும் பழக்கத்தை இயல்பாகவே உடையவர்களாக இருக்க வேண்டும். படிக்கும் பழக்கம் குழந்தைகளின் ஆற்றலையும் அறிவையும் வளர்க்கும் என்பதை உணர்த்தி, அவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்களாகத் திகழ வேண்டும்.

குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிடும் வண்ணம் நாற்பது புத்தகங்களை வெளியிட்டுள்ளது. திட்டத்தின் அடிப்படையில் குழந்தைக் கல்வித்துறை வெளிக்கொண்டு வந்துள்ள இப்புத்தகங்கள் குழந்தைகளின் ஆர்வத்தையும் தேவையையும் நிறைவேற்றிடும் வண்ணம் அமைந்துள்ளன. குழந்தைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இச்சிறு புத்தகங்கள் புதுமையுடனும், நேர்த்தியுடனும், நிறைய படங்களுடனும் உள்ளன. “பார்க்கா” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தக வரிசையில் காட்டப்படும் குழந்தைகள் நம் வீடுகளில் காணப்படும் குழந்தைகளைப் போலவே இயல்பாக இருப்பதால் இப்புத்தகங்களை குழந்தைகள் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். அடிப்படையான மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள இப்புத்தகங்கள் இதற்கு முந்தைய முயற்சிகளை கேள்விக்குள்ளாக்கி, புறந்தள்ளக்கூடிய வகையில் உள்ளன. முதன் முறையாக இந்தியாவில் குழந்தைக ளுக்கான இலக்கியம் அல்லது புத்தக வரிசை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். எல்லா மாநில அரசுகளையும் இது போன்ற புத்தக வரிசைகளை உருவாக்கச் சொல்லியும், ஆசிரியர்களை இத்தகு புது முயற்சிக்குப் பழக்கிடவும் கேட்டுக் கொண்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால் இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டிருந்த சூஊநுசுகூயின் குழந்தைக் கல்விப் பிரிவை மூடுவதற்கான முடிவெடுக் கப்பட்டுள்ளது. இம்முடிவை மாற்றி,குழந்தைக் கல்விப் பிரிவு மீண்டும் செயல்படுவதற்கான ஆணை யினை மத்திய மனித வளத் துறை அமைச்சகம் வெளியிட வேண்டும். மாநில அரசுகளையும், தன்னார்வக் குழுக்களையும், தனியார் புத்தக வெளியீட்டாளர்களையும் குழந்தை இலக்கியங்களை உருவாக்கி அவைகளை நேர்த்தியாகவும், நிறையப் படங்களுடன் கவர்ச்சிகரமாகவும் வெளி யிட ஊக்குவிக்க வேண்டும்.

சமீபத்தில் தேசிய புத்தக டிரஸ்ட் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைச் சித்தரிக்கும் படம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றது. பெண்களின் பிரச்சனைகளைச் சித்தரிக்கும் போது நாம் இன்றும் தொடர்ந்து தவறிழைக் கின்ற நிலையிலேயே இருக்கின்றோம் என் பது வருத்தத்திற்குரியது. ஏராளமான தன் னார்வக் குழுக்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிடுகிறார்கள். இவைகள் சரியான கருத்தோட்டத்துடன் தரமான புத்தகங்களாக இருக்கின்றனவா என்பதைக் கண் காணிக்க உரிய நிறுவனமும், நிபுணர்களும் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறையாகும். இத்தகு தரக் குறைவான புத்தகங் களை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் நிதியிலிருந்து வாங்கி பள்ளிகளின் நூலகங் களை மாநில அரசுகள் நிரப்புகின்றன என்பது கவலையளிக்கின்றது. எனவே தன்னுடைய தலைமைப் பாத்திரத்தைச் சரியாக நிறைவேற்றி இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.

Saturday, February 5, 2011

"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்"


ஒரு அழகான கிராமம். அந்த கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்
காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த
காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையான
பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.

உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.

திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள். அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.

இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! நானே இதை எனக்கு அனுப்பியவரை தேடிக்கிட்டு இருக்கேன்

Wednesday, January 19, 2011

பள்ளி ஆண்டு விழா


திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கல்வி மாவட்டம் மாதாபட்டணம் சசவி மேல் நிலை பள்ளி ஆண்டுவிழாவின் போது பட்டதாரி ஆசிரியர் ஜோ.அருண் தமிழ்நாடு பொது நூலக இயக்குனர் முனைவர் அறிவொளி இடம் இருந்து பரிசு வாங்கிய போது எடுத்த படம். உடன் பள்ளியின் நிர்வாகி டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மற்றும் தலைமை ஆசிரியர் சசி கலா ஆகியோர் உள்ளனர்.

Tuesday, October 26, 2010

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து


ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

வித்தியாசமான உதவி


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.

யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே


இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். 'நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே' என்றான் அவன்.

கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?


அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

உலகத்திற்கு உப்பாய் இரு


ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான்.

மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான்.

'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான்.

அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான்.

ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.

ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது.

மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

புத்தரே தங்கியிருக்கிறார்


ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

வாழ்வு


காலந்தவறி அசைந்தாடி வரும்
ஓசி பஸ்சும்
சளைக்காது
மூசிவீசும் குளிர்க்காற்றும்
நெஞ்சினிலுள் இறங்கும்
கோபக் கவளங்களாய்

வெறுப்பும் சலிப்பும்
குழைத்தெறியும்பொழுதில்
என்றேனும் ஒருகால்
உருகாதோ உறைபனி

மதுவருந்தி
மயங்கும் வெள்ளியிரவுகளில்
பலவீனங்களுடன்
மனிதர்களை நேசிக்க
நெஞ்சு கிஞ்சிக்கும்

பாடப் புத்தகங்களின்
பக்கங்களைப் புரட்டவே அலுப்புறும்
நான்
மாந்தர்களைப் படித்தல்
நடவாதென
நினைவு ததும்பிச் சிரிக்கும்

சுரங்கப் பாதையில்
வகுப்புகளுக்காய்
நடக்கையில்
தென்படும் பெண்களெல்லாம்
தேவதைகளாக மிதக்கின்றனர்

அறிவும் தெளிவும்
தெறித்துச் சிதற
அவர்கள் பேசுகையிலும்
ஆண்களுண்டாக்கும்
காயங்களே
பேச்சிடைப் பொருளாகின்றன

முற்போக்குகளின்
பிரதிநிதியாய்
சமரசங்களற்று
அலையும் இளைஞன்
பட்டத்துடன்
முகவரியற்றுப் போவது
நாளைய விந்தை

அவ்வவ்போது கற்றல்
வன்முறையாய்
சிந்தனையடுக்குகளை
சிதைத்துப்போக
நெருங்குகிறது பரீட்சை

தேடலில்லா
கவிதை போல்
காலத்தை
அசட்டை செய்து
நகர்கிறது வாழ்வு.

கனவு


பாட்டெழுது பூங்குயிலாய், பாதையிடை பூக்களிலே
நாடியுணர் நாயகியின் தேவிமுகந் - தேடிவரு
மாணழகர் காதலிதம் நாணமதை நீத்துன்னிக்
காண்பதுவே காளைக் கனவு.

மெல்லணையாய் பெண்டிரையே மோகவலை தானேறி
கள்ளமன வண்டெனவே கள்ளருந்த - ஆலுகின்ற
வீணரையே வேண்டாது வாழ்வுதனை இன்னலற
காணுமிளங் கன்னிக் கனவு.

பண்ணிசையோ அன்றியொரு பாவெழிலோ தானன்றி
தன்னெதிரில் மூவேளை தம்மக்கள் - உண்ணுதலைக்
கண்ணார நெஞ்சாரக் காண்பதுவே வாணாளில்
காணுமோ ரேழைக் கனவு.

ஏட்டினிலே நானிலமே ஏத்தும் சொல்லிசைப்
பாட்டினிலே சீலமிகு பாரதநம் - நாட்டினிலே
வாணுதல் பூவையரின் காதலதே வாழ்வென்று
காணுதலோர் மோழைக் கனவு.

பாழ்பட்ட செல்வத்தை ஊணறவே சோர்வின்றி
சூழ்ந்திட்ட ஏனையர்க்குஞ் சேர்வின்றி - தாழிட்டு
பேணியவர் தூக்கமற பேயொக்க ஏனாதியாய்
காணும்பே ராசைக் கனவு.

Monday, October 25, 2010

வானில் பறக்கலாம் வா தோழி!


உன்னை
ஒரு முறை அறிந்தேன் - பின்
பலமுறை நீயின்றி ஏங்குகிறேன்.
என்றும் உன்னலமே என் பேச்சு;
இன்று நீயின்றி ஏது மூச்சு
கண்டவுடன் கத்திக் குத்து - இதயத்தில்!
காத்திருப்பதென்னவோ உனக்காய்! - ஆனால்
காலம் போனது கனவாய்

கோடை வெயிலோ,
கார்கால மழையோ,
பனிக்கால குளிரோ
எதுவானால் என்ன?
கன்னிகையே உன் கயல்விழியே - என் காலம்!
நினைவுச் சாரல்கள் நெஞ்சக வயலில் வீசிய போது
கிளைத்ததென்னவோ வெறும் முட்செடிகளே!

தனம் சொன்னது என்னைத் தேடு எப்போதும்,
கானம் சொன்னது என்னைப் பாடு எப்போதும்,
பூவினம் சொன்னது என்னை நாடு எப்போதும்,
பாடம் சொன்னது என்னை படி எப்பொதும்,
துக்கம் சொன்னது என்னை விடு எப்பொதும்,
ஆனால்
நான் சொன்னேன் என்னைத் தொடு எப்பொதும்.

வானம்பாடி போல
சிரமமின்றி சிறகு விரித்து
வேண்டாததை வெறுத்து
துயரங்களை தொலைத்து,
தேடல்களை விடுத்து,
வலிகளை உதறி,
வானில் பறக்கலாம் வா தோழி!

என்று தான் இந்த நிலை மாறுமோ?


இந்த நூற்றாண்டில் ஊடகம் என்றவகையில் இணையம், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றோடு மக்களை அதிகமாக சென்றடைகின்ற இன்னொரு முக்கியமான ஊடகம் சினிமா. சின்னத்திரையும் சரி வெள்ளித்திரையும் சரி நிறையவே மக்களிடை ஆதிக்கம் செய்கின்றது. கிராமங்களில் கூட சினிமா திரையரங்குகள் இருக்கின்றன. ஏன் இன்னும் சொல்லப்போனால் பல தொலைக்காட்சிகளும், வானொலிகளும் இந்த வெள்ளித்திரையில் அதாவது சினிமாவில் தங்கியிருக்கிறது. காமெடியாக, பாட்டாக, காட்சியாக பற்பல நிகழ்ச்சிகளை இந்த திரைப்படங்களை வைத்தே தாயாரித்து தங்கள் காலத்தை போக்குகிறார்கள் என்பதுதான் உண்மை.

அதே போல தான் சின்னத்திரையும். நாடகம் போடத ஒரு தொலைக்காட்சி நம்மவர்களிடையே தாக்குப்பிடிக்குமா என்றால் யோசிக்க வேண்டிய விசயம். இப்படி மக்களை பல வகையில் சென்றடைகின்ற ஊடகமான இந்த சினிமா பெண்களை நோக்கும் விதம் இன்னும் மாறுபடவில்லை?

பல திரைப்படங்களில் பெண்கள் பற்றிய பழமையான கருத்தையே இன்னும் காணமுடிகிறது. கவர்ச்சிக்காக பெண்களை பயன்படுத்துவதும். பெண்களை பண்டமாக பார்ப்பதும் இன்னும் நின்றுவிடவில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனை மையமாக கொண்டு அவரது உதவியால் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்கிறது போல தான் அனேக படங்கள் வெளிவருகின்றன. பெண்களை மையமாக வைத்து அவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்ற மாதிரி படங்கள் வரவில்லை என்று சொல்லவில்லை அப்படி வந்திருந்தாலும் குறைவு தான்.

அழகுக்காக ஒரு ஈர்ப்பிற்காக தான் அநேக படங்களில் பெண் நாயகிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதைப்போன்று தான் பாடங்களில் வருகின்ற காட்சிகளில் நாயகர்கள் சாதாரனமாக ஆடை அணிந்திருப்பார்கள். நாயகிகள் மட்டும் சில படங்களில் அரைகுறையாய் கவர்ச்சியாய் அணிந்திருப்பார்கள். இந்த நிலை ஏன் இன்னும்?

அண்மையில் ஒருபடம் பார்க்க கிடைத்தது. அதில் நாயகனும் அவனது சகோதரனும் நாயகியை காதலிப்பார்கள். நாயகன் சகோதரனுக்காய் நாயகியை விட்டுக்கொடுப்பார். விட்டுக்கொடுக்கிறது பெரிய விசயமே இல்லைங்க. பாராட்டலாம் ஆனால், விட்டுக்கொடுப்பது அந்த பெண்ணின் சம்மதத்தோடு நடக்கிறதா? என்றால் இல்லை. அவர் நினைச்சார் செய்கிறார். இதை விடக்கொடுமை என்ன என்றால் "நீ அவளை எடுத்துக்கோ" என்கிறார் நாயகன். பலமுறை இந்த சொற்றொடர் பாவிக்கப்பட்டது. பரிதாபமாக இருந்தது. இப்படிப்பட்ட வார்த்தை பிரயோகம் பெண்ணை நோக்கி பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. பெண் என்ன பண்டமா?? எடுத்துக்கோ வைச்சுக்கோ என்று கையை காட்டுவதற்கு? இப்படி பல படங்களில் இந்த வசனம் பார்க்ககூடியதாக இருந்தது, இருக்கிறது. அது நிற்க.

சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி பல சந்தர்ப்பங்களில். ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது திருமணம் தான் என்று நினைக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் திடிரென ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசிய கல்யாணம் தடைப்பட்டுவிட்டால் பெண்ணின் தகப்பனார் செய்கின்ற முதல் வேலை. மாப்பிள்ளை வீட்டாரின் காலில் விழுந்து என் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுங்கள். வாழ்க்கையை சீரழிச்சிடாதீங்க என்று புலம்பிற காட்சிகள் பல? ஏனைய்யா இந்த நிலமை? வாழ்க்கை என்பது திருமணமா? திருமணம் நடக்கவில்லை என்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிஞ்சிதா? ஏன் இப்படியான ஒரு மாயையினை அனேக காட்சிகளில் உருவாக்குகிறார்கள்.

திரைப்படங்களில் வருகின்ற இன்னொரு விசயம் என்னவென்றால், நாயகன் அல்லது நாயகியை சார்ந்தவர்கள் அது தாயாக கூட இருக்கலாம் சொல்றது, "பொம்பளை மாதிரி அடக்க ஒடுக்கமாய் இரு"? அதென்னங்க பொம்பளை மாதிரி? புரியவே இல்லை.

படத்தில ஒரு ரவுடி கலாட்டா செய்கிறார். அதன் காரணமாக ஒரு சின்னப்பிள்ளை பாதிக்கப்படுகிறார். இதைப்பாத்த அம்மா கோவம் கொண்டு அந்த ரவுடியை பேசிறாங்க. பொலீஸ் வர, அந்த அம்மா நடந்ததை சொல்ல முற்படுறாங்க ஆனா அந்த நாயகன் விடல. அவர் சொல்றார். "பொம்பளை மாதிரி அடக்கி வாசி" என்ற தொனில அவங்களை பேசிறார்.? ஏன் இப்படி படைக்கிறார்கள் என்று புரியவில்லை.

ஒரு பெண் நியாயத்தை கேட்கக்கூடாதா? ஏன் இப்படி பொம்பளை மாதிரியிரு. அடக்கி வாசி என்ற இந்த பதத்தை பாவிச்சு இன்னும் பிற்போக்கு வாதம் பேசி. பெண்களை முடக்கணும் என்று நினைக்கிறார்கள் என்பது வேதனையான விசயம். அப்படிப்பட்ட வசன நடைகளை கேட்டுவிட்டு இருக்க முடியல. இது ஒரு சில படங்களில் கண்டது தான். ஆனா இப்படி பல படங்களில் நடக்கிறது. பெண்கள் முன்னோக்கி வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற, பல வளர்ச்சியைக்கண்டு விட்ட இந்த காலத்தில ஏன் இப்படியான காட்சிகள் அமைக்கப்படுகின்றன? புரியவில்லை. என்று தான் இந்த எடுத்துக்கோ வைச்சுக்கோ என்ற நிலை மாறுமோ? எதிர்பார்த்தவண்ணம்

நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு


நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு.
இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாற்று வெள்ளம்… திரும்பின

பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்? என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரைமணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக்
கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை,
நீயே சொல்லு என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே
தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்? என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.

அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால்
அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம்
செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான்
எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத்
தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம்
யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம்
முழுவதையும் செலவிடுகிறார்.

நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத்
தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்.

Friday, October 22, 2010

வேறயென்ன? வேறயென்ன?


அம்மா அப்பா அருகில் இருந்தால்
தொலைபேசியில்
அளவாகப்பேசுகிறாய்....

வேறயென்ன? வேறயென்ன?
என்று அடிக்கடிகேட்டு
தொடர்பை துண்டிக்க நினைக்கிறாய்...

யாருமே இல்லையென்றால்
குழந்தையாய் குதுகலித்து
எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறாய்.

ஆனால் பெருச்சாளிகள் அப்படியல்ல!


காதலிக்காமல் இருப்பதைவிட, காதலித்து காதல் தோல்வி கண்டு, முதல் காதலையே நினைத்து நினைத்து உருகுவதும், கண்ணீர் வடிப்பதும் எவ்வளவோ சுகமானது என்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா? சட்டையை மாற்றுவது போல காதலிகளையும் ஏன் மனைவியையும் மாற்றும் மனிதர்களை நாம் பார்க்கிறோம் இல்லையா!

ஆனால் பெருச்சாளிகள் அப்படியல்ல, PRIARIE VOLES என்ற இனத்தைச் சேர்ந்த பெருச்சாளிகளில் ஆண் பெருச்சாளிக்கு ஏகபத்தினிவிரதம் என்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் க்டுபிடித்துள்ளனர். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று இந்த ஆண் பெருச்சாளி செல்வரம் தந்துவிடுகிறதாம். அது மட்டுமல்ல, இன்னொரு பெண் பெருச்சாளி க்கும் பார்வையை வீசினால், ரூர்ப்பனகை மூக்கை இராமன் அறுத்தது போல, பாய்ந்து தாக்கி விரட்டிவிடுகிறதாம். ஆனால் ஒரு நிபந்தனை, தனது காதலியுடன் ஒருமுறையாவது உடலுறவு கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்காவின் புளோரிடா அரசுப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த PRIARIE VOLES இனப் பெருச்சாளிகளின் காதல் விவகாரத்தை விரிவாக ஆராய்ந்தார்கள். இந்த ஆண் பெருச்சாளி, பெண் பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளும் போது, Dopamine என்ற ஒரு ரசாயனப்பொருள் அதனுடைய முளைக்குள் பெருமளவில் சுரகாகிறதாம். இந்த ரசாயனப் பொருள் தான் ஆயுள் முழுவதும் அழியாத காதல் பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறதாம்.

இது உண்மைதான் என்று நிரூபிக்க முற்பட்டார் ஆய்வாளர் குழுவின் தலைவர் BRANDON ARAGONA, அவர் இந்த Dopamine ரசாயனப்பொருளை பெண்பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளாத ஒரு பெண் பெருச்சாளியுன் உடம்பில் ஊசி மூலம் செலுத்தினார். அதன் பிறகு இந்த ஆண் பெருச்சாளிக்கு பெண்வாசனையே பிடிக்காமல் போய்விட்டது. பெண்பெருச்சாளிகளைக் கண்டால் ஓடி ஒதுங்க ஆரம்பித்தது.

இது எதனால் இந்த Dopamine ரசாயனப்பொருள், பெருச்சாளியின் மூளையில் உள்ள nucleus accumbens என்ற பகுதியை மாற்றியமைத்து விடுவிதது. இந்த மாற்றம் சாதாரண மாற்றமல்ல. அதிரடி மாற்றம். எப்படி என்றால், காதல் ஜோடியைப்பிரித்து, ஆண் பெருச்சாளிக்கு முன்னால் இன்னொரு பெண் பெருச்சாளியை நிறுத்திய போது, அதைக் கண்டதுமே ஆண் பெருச்சாளியின் மூளையில் Dopamine சுரந்தது. ஆனால், அது வேறு நரம்புச் சுற்று வழியாகத் திசைமாறிச் சென்று விட்டது. இதன் விளைவாக, புதிய பெண்ணை ஆண்பெருச்சாளி அலட்சியப்படுத்தி விட்டது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் Nature Neuroscience என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சரி, மனிதர்களுக்கும் இப்படிப்பட்ட Dopamine ரசாயனப்பொருள் சுரக்குமானால், கற்பழிப்புக் குற்றங்களை இல்லாமல் போகுமல்லாவா?இதைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார் BRANDON ARAGONA. பெருச்சாளி போலத்தான் மனிதர்களுக்கும் மூளை அமைப்பு இருக்கிறதாம். ஆனால், ஒரேஒரு வித்தியாசம், மனித மூளைமாகப்பெரியது. அது, வெவ்வேறு நெருக்குதல்களுடன் இயங்குகிறது. அதனால் தான் காதலியைக் கைவிடுவது, மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணத்தில் மயங்குவது என்பது போன்ற சமூகக் கற்றங்கள் அதிகரிக்கின்றன

எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்டேன்.

வாலைத் தூக்கிக்கொண்டு
ஓடி வந்த அணில்,
திறந்த கதவினுள்
எட்டிப் பார்க்கிறது.

பரணில் ஒளிந்திருந்த பூனை
திடுக்கென இறங்கி ஓடியது.
'குட்டி போட்டுவிடப் போகிறது'
அஞ்சினாள் அம்மா.

சமையல் மேடையில்
அடிக்கடி உலவுகின்றன
பல்லிகள்.

குளியலறையிலிருந்து
குதித்துத் தாவுகின்றன
தவளைக் குஞ்சுகள்.

கரப்பான்களுடன்
அவ்வப்போது நிகழ்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம்.

ஒட்டடை தட்டும்போதெல்லாம்
தப்பிவிடுகிறது சிலந்தி.

ஒரு படையெடுப்பு
எப்படி இருக்கும் என
எறும்புகள் கற்பிக்கின்றன.

எறும்புகள் மொய்த்த முறுக்குகளை
வெயிலில் காயவைத்தேன்.
கவ்விச் சென்றது காக்கை.

மின்விசிறியை ஏமாற்றி,
என்னை எங்கே, எப்படி
கடிக்க வேண்டும் எனக்
கொசுக்களுக்குத் தெரியும்.

இவற்றிடமிருந்து தப்பிக்க,
அனைத்து ஜன்னல், கதவுகளை
மூடி வைத்தேன்.
மூச்சு முட்டியது
வியர்வை பெருகியது.

எல்லாக் கதவுகளையும்
திறந்துவிட்டேன்.

முக்கியம்தான்
என் மூச்சு எனக்கும்
அதன் மூச்சு அதற்கும்.

Thursday, October 21, 2010

Believe in destiny

1) First things first. Do not pile up the issues and solve them immediately
2) Use the intuition. Practice the analytical skill with intuition to decide the course
3) Utilize the opportunities. Opportunities are rare, be alert and utilize them in full extend
4) Be courageous. Bold enough to express the right thing and be impartial
5) All are not same. Don’t expect people to be perfect and allow them to learn
6) Don’t expect kindness. World will never be kind to us and don’t expect any favour
7) Don’t confuse. Balance the life and be organized. Today’s life should not be a worry for tomorrow
8) Quality in life. Life should be quality driven and not money driven
9) Principles centered life. Live with the principles and practice them with characters
10) Believe in destiny. Noting can happen except what has been destined (by God)

நானே முடிந்தாலும்

என் தேடல்கள் முடிவதில்லை
நானே முடிந்தாலும்

சில தேடல்கள் முடிவதில்லை
தேடுவது கிடைத்தாலும்
சில கேள்விகள் நிறைவதில்லை
பதில்கள் தெரிந்தாலும்
சில நாட்கள் முடிவதில்லை
சூரியன் மறைந்தாலும்
சில நினைவுகள் அழிவதில்லை
இதயமே அழிந்தாலும்

உயிருக்குள் உறைந்தவைகள்
உலகமே அழிந்தாலும்
ஒரு நாள் மீண்டு வரும்
வரும் நாளை நோக்கிய இப்பயணம்
வாழ்நாளும் தாண்டி வாழும்

என் தேடல்கள் முடிவதில்லை
நானே முடிந்தாலும்

நீ விட்டுச்சென்ற வாசனைகளில் மிச்சமிருக்கிறது எனது வாழ்க்கை.!

உன்னை பார்த்த பிறகும்..
ஒளிந்து கொள்கிறது..
என் மனது உனக்குள்ளும்..
உன் மனது எனக்குள்ளும் !

நீ விட்டுச்சென்ற வாசனைகளில்
மிச்சமிருக்கிறது எனது வாழ்க்கை.!

உன் கண்ணை ஒட்டிய கண்ணீருக்குள்
இன்னும் மின்னுகிறது
முன்னம் உள்ள புன்னகை !

என்னில் காணமல் போன கனவுகள்
தேடிக்கொண்டிருக்கின்றன
உனது நினைவுகளை..!

நீ கேட்காமல் விட்டுசென்ற
என் வார்த்தைகள்
முட்டிமோதிகொள்கின்றன
என் வீட்டு சுவர்களில்...!