Sunday, August 30, 2026

அவள் கண்கள் பேசிய முதல் நாள்

அன்று அவள் அத்தை வீட்டிலிருந்து வந்திருந்தாள்.

எனக்கு அது முதல் சந்திப்பு.

முதல் சந்திப்பு என்றாலே மனதுக்குள் ஏதோ ஒரு சிறிய திருவிழா நடக்கும் அல்லவா?

அப்படித்தான் அன்று என்னுள்ளும் நடந்துகொண்டிருந்தது.

வெளியில் மட்டும் அதைத் தெரியவிடாமல், எதுவுமே பெரிதாக இல்லை என்பதுபோல நடிக்க முயன்றேன். அவளிடம் பேசுவதற்கு முன்னால் மனதுக்குள் நூறு வார்த்தைகளைத் தயார் செய்திருந்தேன். ஆனால் அவள் எதிரில் வந்ததும் அந்த நூறு வார்த்தைகளும் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டன.

அவளும் அமைதியாகத்தான் இருந்தாள்.

முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை.

ரொம்பவும் கேஷுவலாக இருந்தாள்.

ஆனால் அவள் கண்கள் மட்டும்...

அவை என்னிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தன.

அந்தப் பார்வையைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அப்போது எனக்கு தைரியம் இல்லை. ஆனால் அதை மறந்துவிடும் அளவுக்கு நான் அப்பாவியாகவும் இல்லை.

"வண்டியில போகலாமா?"

என்ன பேசுவது என்று தெரியாமல் கேட்டுவிட்டேன்.

அவள் சின்னதாகத் தலையசைத்தாள்.

நான் ஸ்ப்ளெண்டரை ஸ்டார்ட் செய்தேன்.

எஞ்சின் சத்தத்தைவிட என் இதயத்தின் சத்தம்தான் எனக்குக் கேட்பது போல இருந்தது.

வண்டியை வழக்கத்தைவிட கொஞ்சம் வேகமாக ஓட்டினேன்.

அவள் பின்னால் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அவள் எங்கே போக வேண்டும் என்று கேட்கவில்லை.

நானும் எங்கே போகிறோம் என்று சொல்லவில்லை.

உண்மையைச் சொன்னால், எங்கே போகிறோம் என்று எனக்கே சரியாகத் தெரியவில்லை.

நகரத்தைத் தாண்டி, வீடுகள் குறைந்து, வயல்கள் தொடங்கியதும் மனதுக்குள் ஒரு அமைதி வந்தது.

கடைசியில் பழக்கமான ஒரு வயல் வரப்பின் அருகே வண்டியை நிறுத்தினேன்.

"இங்க கொஞ்சம் நடந்து போவோமா?"

அவள் என்னைப் பார்த்தாள்.

ஒரு நொடி.

பிறகு சின்னதாகத் தலையசைத்தாள்.

அந்தத் தலையசைப்பில் சம்மதத்தைவிட நம்பிக்கையே அதிகமாக இருந்தது.

இருவரும் வயல் வரப்பில் நடக்கத் தொடங்கினோம்.

சுற்றிலும் பச்சை.

பச்சைக்கு நடுவே சின்னச் சின்ன நீர்க்கால்கள்.

காற்றில் ஈரமான மண்ணின் வாசனை.

தொலைவில் ஏதோ ஒரு பறவை கூவியது.

வரப்பின் ஓரத்தில் வளர்ந்திருந்த புல்கள் காற்றில் மெதுவாக அசைந்தன.

அந்தப் பெரிய உலகத்தில் அப்போது நாங்கள் இருவர் மட்டுமே இருப்பது போல இருந்தது.

அவள் என்னுடன் நடந்துகொண்டிருந்தாள்.

ஆனால் பேசவில்லை.

நானும் பேசவில்லை.

சில நேரங்களில் இரண்டு மனிதர்களுக்கு இடையில் வார்த்தைகள் தேவையில்லாமல் போய்விடுகின்றன.

அன்று அப்படித்தான்.

அவள் என்னைப் பார்க்கும்போதெல்லாம், நான் பார்த்துவிடுவேனோ என்று பயந்தவள் போல உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

முகத்தில் லேசான வெட்கம்.

அதைப் பார்த்தவுடன் என்னுள் ஏதோ ஒரு இனிய பதற்றம்.

"உனக்கு பயமா?"

என்று கேட்க நினைத்தேன்.

ஆனால் கேட்கவில்லை.

அவளுடைய அந்தச் சிறிய தயக்கத்தை அப்படியே ரசித்துக்கொண்டே நடந்தேன்.

சிறிது நேரம் கழித்து ஒரு இடத்தில் நின்றேன்.

"உட்காரலாமா?"

அவள் சுற்றிலும் பார்த்தாள்.

"இங்க பூச்சி எல்லாம் இருக்கும் போல... வேற எங்கேயாவது உட்காரலாமே."

சிரித்தேன்.

சிறிது தூரத்தில் ஒரு பெரிய பாறை இருந்தது.

"அந்தப் பாறை கிளீனா இருக்கு. அங்க உட்காருவோமா?"

அவள் மீண்டும் தலையசைத்தாள்.

இருவரும் அங்கே சென்றோம்.

அவள் எனக்கு கொஞ்சம் தூரமாக உட்கார்ந்தாள்.

அந்தத் தூரம் அப்போது எனக்குப் பெரியதாகத் தோன்றியது.

"இங்க வேற ஏதாவது இடம் இருக்கா?"

என்று அவள் கேட்டாள்.

"எனக்குத் தெரியல. ரொம்ப வருஷம் ஆச்சு நான் இங்க வந்தே."

அவள் என்னைப் பார்த்தாள்.

"அப்புறம் இங்கே ஏன் கூட்டிட்டு வந்த?"

நான் சிரித்தேன்.

"இதுதான் எனக்குத் தெரிஞ்ச பாதுகாப்பான இடம்."

அவள் சிரிக்கவில்லை.

சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு மெதுவாகக் கேட்டாள்,

"யாராவது வந்துட்டா?"

"யாரும் வரமாட்டாங்க."

"உங்க அப்பா வந்தா?"

அந்தக் கேள்வியில் இருந்த தயக்கத்தை நான் மறக்கவே முடியாது.

"அவர் வரமாட்டாரு. இந்த வயல்ல இப்ப வேற ஒருத்தர் பயிர் வைக்கிறார்."

அவள் மெதுவாக மூச்சை விட்டாள்.

அந்த நிம்மதியைப் பார்த்ததும் எனக்கும் சிரிப்பு வந்தது.

பேச்சை வேறு பக்கம் திருப்பினேன்.

இந்த வயல் எங்கள் தாத்தா வாங்கியது என்று சொன்னேன்.

நான் சின்ன பையனாக இருந்தபோது தாத்தாவுடன் சைக்கிளில் அடிக்கடி இங்கே வந்த கதைகளைச் சொன்னேன்.

வயலை உழுது விதைப்பதற்குத் தயாராக்கும் நாட்களில் தாத்தாவுடன் வருவேன்.

அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் வரப்பில் ஓடிக்கொண்டிருப்பேன்.

வேலை முடிந்ததும் தியேட்டர் கடையில் ஐஸ் போட்டு சர்பத் வாங்கித் தருவார்.

சில நேரம் மிச்சர்.

சில நேரம் ஓமப்பொடி.

அந்தச் சிறிய விஷயங்களே அப்போது எனக்குப் பெரிய சந்தோஷமாக இருந்தன.

"சனி, ஞாயிறு வந்தாலே தாத்தாவோட வயலுக்கு வந்துருவேன்," என்றேன்.

அவள் அமைதியாக என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நீ என்ன செய்வ?"

அவள் சிரித்தாள்.

"நாங்க வீட்லதான் இருப்போம். ஏதாவது பேசிட்டு இருப்போம்."

"எதைப் பற்றி?"

"அதெல்லாம் தெரியாது..."

என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.

"சிரிச்சு சிரிச்சு பல்லைக் காட்டிக்கிட்டு இருப்போம்."

அவள் சொன்ன விதம் என்னையும் சிரிக்க வைத்தது.

அவளுடைய சிரிப்பை அப்போது முதன்முறையாக அப்படி நெருக்கமாகப் பார்த்தேன்.

அது பெரிய சத்தமான சிரிப்பு இல்லை.

மெதுவாக மலரும் ஒரு பூவைப் போல இருந்தது.

பிறகு அவள் வீட்டைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

அத்தைமார்கள்.

சித்தப்பாமார்கள்.

உறவினர்கள்.

வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்கள்.

யார் யாரிடம் என்ன சொன்னார்கள்.

யார் யாரை கிண்டல் செய்தார்கள்.

அவள் பேசிக்கொண்டே இருந்தாள்.

நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆனால் உண்மையில் நான் கேட்டது அவள் வார்த்தைகளைவிட அவள் குரலைத்தான்.

அந்தக் குரல் அன்றுதான் எனக்குப் புதிதாக அறிமுகமானது.

அப்போது வெயில் கொஞ்சம் மேலேறியிருந்தது.

சூரியன் நேராக அவள் முகத்தில் விழுந்தது.

அவள் கண்களைச் சுருக்கிக்கொண்டாள்.

பிறகு பச்சை நிற சுடிதாரின் ஷாலை எடுத்து தலையில் போட்டுக்கொண்டாள்.

அந்தக் காட்சி...

இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கிறது.

பச்சை வயலின் நடுவே,

பச்சை நிற ஆடையில்,

அந்த ஷாலுக்குள் பாதி மறைந்த முகம் மட்டும் வெயிலைவிட வெளிச்சமாகத் தெரிந்தது.

அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

அவள் கவனித்துவிட்டாள்.

"என்ன?"

என்று கேட்டாள்.

"ஒன்னுமில்ல."

"அப்புறம் ஏன் அப்படிப் பார்க்கிற?"

பதில் சொல்லாமல் சிரித்தேன்.

அவளும் சின்னதாகச் சிரித்தாள்.

நான் கொஞ்சம் அருகில் நகர்ந்து உட்கார்ந்தேன்.

அவள் உடனே கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள்.

நான் சிரிப்பை அடக்க முடியாமல் பார்த்தேன்.

அவள் என்னைப் பார்த்தாள்.

"இப்படி பக்கத்துல உட்கார்ந்தா யாராவது பார்த்துடுவாங்க."

அவள் குரலில் கோபம் இல்லை.

வெட்கம் மட்டுமே இருந்தது.

அந்த வெட்கம் என்னிடம் ஏதோ ஒரு உரிமையைக் கொடுத்தது போலவும், அதே நேரத்தில் இன்னும் அதிகமாகத் தயங்க வைத்தது போலவும் இருந்தது.

சில நொடிகள் இருவரும் அமைதியாக இருந்தோம்.

பிறகு அவள் மீண்டும் என்னைப் பார்த்தாள்.

இந்த முறை பார்வையைத் திருப்பவில்லை.

அந்தப் பார்வையில் கேள்வியும் இருந்தது.

தயக்கமும் இருந்தது.

புதிதாகப் பிறக்கும் ஒரு உணர்வும் இருந்தது.

என்னுடைய மனம் அந்த ஒரு பார்வையில் எங்கோ தொலைந்து போனது.

அவள் கையைப் பார்த்தேன்.

ஒரு கணம்...

அந்தக் கையைத் தொடலாமா என்று மனம் கேட்டது.

அடுத்த கணம்...

தொட்டால் அவள் என்ன நினைப்பாள் என்று பயந்தது.

எப்படியோ தைரியத்தைச் சேர்த்து கை நகர்த்திய அந்தச் சிறிய நொடியிலேயே அவள் கூச்சத்துடன் கையை விலக்கிக்கொண்டாள்.

அவள் என்னைப் பார்த்தாள்.

நான் எதுவும் பேசவில்லை.

அவளும் எதுவும் பேசவில்லை.

ஆனால் அந்த அமைதிக்குள் ஆயிரம் வார்த்தைகள் இருந்தன.

"இவ்வளவு சீக்கிரமா?"

என்று அவள் பார்வை கேட்டது போலவும்,

"நான் உன்னைப் பிடிக்காமல் இல்லை..."

என்று அவள் கண்கள் சொல்லியது போலவும் இருந்தது.

அன்று காதல் என்ற வார்த்தையை நாங்கள் யாரும் சொல்லவில்லை.

ஆனால் அந்த நாளுக்குப் பிறகு அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரிய ஆரம்பித்தது.

சுற்றிலும் பச்சை வயல்.

மேலே கொதிக்கும் வெயில்.

காற்றில் மெதுவாக அசையும் அவள் ஷால்.

வரப்பில் எங்களுக்கிடையே விழுந்திருந்த அந்தச் சிறிய தூரம்.

அந்தத் தூரத்தைவிட பெரியதாக இருந்த தயக்கம்.

அதையெல்லாம் கடந்து எங்களுக்குள் வந்து நின்ற ஒரு புதிய உணர்வு.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பலாம் என்று எழுந்தோம்.

வயல் வரப்பில் மீண்டும் இருவரும் நடந்தோம்.

வரும்போது இருந்த அமைதி அப்படியே இருந்தது.

ஆனால் போகும்போது அந்த அமைதியின் அர்த்தம் மட்டும் மாறியிருந்தது.

வண்டியின் அருகே வந்ததும் அவள் மீண்டும் பின்னால் உட்கார்ந்தாள்.

நான் ஸ்ப்ளெண்டரை ஸ்டார்ட் செய்தேன்.

திரும்பும் வழியில் வண்டியை மெதுவாக ஓட்டினேன்.

அன்று ஏன் அவ்வளவு மெதுவாக ஓட்டினேன் என்று எனக்கே தெரியவில்லை.

அந்தப் பாதை இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் என்று மனம் நினைத்திருக்கலாம்.

வீடு நெருங்கியபோது அந்த நாள் முடிந்துவிடப் போகிறதே என்ற சிறிய வருத்தம் வந்தது.

அவள் இறங்கினாள்.

என்னைப் பார்த்தாள்.

எதுவும் சொல்லவில்லை.

நானும் எதுவும் சொல்லவில்லை.

அவள் உள்ளே சென்ற பிறகும் நான் சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தேன்.

அன்றுதான் எனக்குப் புரிந்தது.

ஒரு மனிதரை முதன்முதலாகச் சந்திக்கும் நாள் என்பது எப்போதும் சாதாரணமான நாளாக இருக்காது.

சில மனிதர்கள் வந்து,

ஒரு சில மணி நேரங்கள் மட்டும் நம்முடன் இருந்துவிட்டு,

நம்முடைய நினைவுகளில் பல வருடங்களுக்கு இடம் பிடித்துவிடுகிறார்கள்.

அவளும் அப்படித்தான்.

அன்று அவள் என்னிடம் அதிகமாகப் பேசியது வார்த்தைகளால் இல்லை.

அவள் கண்களால்தான்.

அந்த வயல் வரப்பில் நடந்த முதல் சந்திப்பு...

Monday, May 4, 2026

நடக்கச் சொல்லித் தரவா...

என் உயிரே,

இந்த கடிதத்தை எழுத ஆரம்பிக்கும் முன், பல முறை என் மனசு உன்னிடம் ஓடிப் போய்ட்டு திரும்பி வந்தது. சொல்லவேண்டிய வார்த்தைகள் நிறைய இருக்கிறது, ஆனா அவற்றை எப்படிப் போடுவது என்று தெரியாமல் என் விரல்கள் தடுக்கின்றன. உன்னிடம் பேசும்போது எல்லாமே எளிதாகிவிடும், ஆனால் இங்கே காகிதம் முன்னால் இருக்கும் போது என் இதயம் தான் பேசுகிறது.

நீ என் வாழ்க்கையில் வந்த நாளிலிருந்து, நான் என்னவென்று எனக்கே புரிய ஆரம்பித்தது. நான் சிரிப்பதற்கும், கோபப்படுவதற்கும், சின்ன சின்ன விஷயங்களில் மகிழ்வதற்கும் காரணம் நீயாகிவிட்டாய். உன் குரல் கேட்டால் என் நாளே மாறிவிடுகிறது. உன் நினைவுகள் என் இரவுகளையும் நிரப்புகிறது.

நீ அருகில் இல்லாத நேரங்களில் தான் உன் மதிப்பு இன்னும் அதிகமாக புரிகிறது. ஒவ்வொரு நொடியும் நீ இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன். உன்னோடு பேசும் அந்த சிறிய நேரங்களுக்காகவே நான் முழு நாளையும் காத்திருக்கிறேன்.

நம்முடைய கனவுகள், நம்முடைய எதிர்காலம், நம்முடைய சின்ன சின்ன சண்டைகள்—இதெல்லாம் என் மனசுக்குள் ஒரு அழகான உலகம் கட்டி இருக்கிறது. அந்த உலகத்தில் நீயும் நானும் மட்டும் தான். நான் தவறாக இருந்தாலும் என்னை புரிந்துகொள்ளும் ஒரே மனிதர் நீ தான். அதனால்தான் நான் உன்னிடம் இவ்வளவு சுலபமாக என்னை முழுவதும் ஒப்படைத்துவிட்டேன்.

ஒரு நாள் நம்முடைய இந்த காதல் ஒரு நினைவாக மட்டும் இல்லாமல், ஒரு வாழ்க்கையாக மாறும் என்று நான் நம்புகிறேன். அந்த நாளை நான் காத்திருக்கிறேன்—உன்னுடன் கையை பிடித்து நடந்துகொண்டே போகும் அந்த நாளை.

அந்த பாதையில் நான் தடுமாறினால், என் கையை பிடித்து நடக்கச் சொல்லித் தரவா.

Sunday, May 3, 2026

அது வெறும் பயணம் அல்ல,அது என் இளமையின் ஓர் அத்தியாயம்;

காலை இன்னும் முழுதாக விழிக்காத நேரம்,
மந்தமான நீல வெளிச்சத்தில் தெருக்கள் நெளிகின்றன,
தூங்கிக்கிடக்கும் வீடுகளின் சுவாசம் போல
மெல்ல நிசப்தம் பரவிக்கிடக்கும் உலகம்.
அந்த அமைதிக்குள் நான்—
பையைக் கட்டி, கனவுகளைக் தோளில் சுமந்து,
மூன்று மணி நேரப் பயணத்தின் முதல் அடியை வைக்கும் போது
இதயம் ஏதோ புதிதாய் துடிக்கத் தொடங்கும்.
பஸ் ஜன்னலில் ஒட்டிக்கிடக்கும் மழைத்துளிகள்
நேற்றைய நினைவுகளைப் போல மெதுவாக வழியும்;
அவற்றின் வழியே பார்த்தால்
விடியலின் முதல் வர்ணங்கள் வானில் படரத் தொடங்கும்.
சூரியன் இன்னும் முழுதாய் வரவில்லை—
ஆனால் அவன் வருவான் என்ற நம்பிக்கை
ஒவ்வொரு முகத்திலும் சிறிய ஒளியாக தெரியும்.
பாதையின் ஓரம் நின்ற மரங்கள்
என் பயணத்தை எண்ணிக்கொண்டே இருக்கின்றன போல;
ஒவ்வொரு நாளும் அதே பாதை,
ஆனால் ஒவ்வொரு நாளும் வேறொரு உணர்வு.
சில நேரம் சத்தம்—
சில நேரம் முழு அமைதி—
அந்த இரண்டிற்கும் நடுவே தான்
என் இளமை ஓடிக்கொண்டிருக்கிறது.
மாலை திரும்பும் பாதை வேறுபட்டது,
சூரியன் சோர்ந்து வீடு திரும்பும் நேரம் அது;
வானம் ஆரஞ்சு நிறத்தில் எரிந்து கொண்டிருக்கும்,
நாளின் சுவடுகளை மெதுவாக அணைத்துக்கொண்டு.
மூன்று மணி நேரப் பயணம் மீண்டும்—
ஆனால் இப்போது மனதில் சுமை இல்லை,
பள்ளி சிரிப்புகள், நண்பர்கள் குரல்கள்,
அனைத்தும் காற்றில் கலந்து இசையாக மாறுகின்றன.
சில நேரம் சாளரத்துக்கு வெளியே பார்த்து
என்னவோ தேடிக்கொண்டே இருப்பேன்;
அந்த தேடல் என்ன என்று தெரியாது—
ஆனால் அது என் மனதின் அமைதிக்கான வழி.
பயணத்தின் சத்தத்தில் கூட
ஒரு தனி அமைதி இருக்கிறது;
அது வெளியில் இல்லை—
அது உள்ளுக்குள் உருவாகும் ஓசை.
அந்த நீண்ட பாதையில்
நான் மட்டும் அல்ல,
என் கனவுகளும் என்னோடு பயணம் செய்கின்றன.
காலை ஒவ்வொன்றும்
ஒரு புதிய தொடக்கம்,
மாலை ஒவ்வொன்றும்
ஒரு இனிய முடிவு.
அந்த மூன்று மணி நேரம்—
அது வெறும் பயணம் அல்ல,
அது என் இளமையின் ஓர் அத்தியாயம்;
விடியலை நோக்கி ஓடும் என் உள்ளத்தின் கதை.
நாளை மீண்டும் இதே பாதை,
இதே காற்று, இதே சாளரம்—
ஆனால் நான் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருப்பேன்;
அந்த பயணம் என்னை மெதுவாக உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

அடுத்த வாரம், பள்ளியில் ஒரு செய்தி பரவியது

பள்ளியின் பழைய கட்டிடத்தின் நடுவில் இருந்த அந்த நீண்ட வழித்தடம், ஒவ்வொரு காலைவும் ஒரு தனி உயிர் பெற்றது போல இருக்கும். அங்கேயே தினமும் முதலில் நடந்து செல்வார் சமூக அறிவியல் ஆசிரியர் அருண் சார். மாணவர்கள் எல்லாரும் அவரை அன்பாக “அருண் அண்ணா” என்று அழைப்பார்கள்.

அவரது கற்றல் முறை சாதாரணமில்லை. பாட புத்தகத்தை மட்டும் படிக்க சொல்லாமல், வாழ்க்கையைப் பற்றி பேசுவார். கவிதைகளை உணரச்செய்வார். பல மாணவர்களின் கனவுகளுக்கு அவர் ஒரு தீப்பொறி.

ஆனால் அந்த பள்ளியில் எல்லாரும் அவரைப் போல நினைக்கவில்லை.

புதிய நிர்வாகம் வந்த பிறகு, மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்ற ஒரு அழுத்தம் உருவானது. “பாடத்துக்கு வெளியே பேசாதீங்க”, “சிலபஸ் முடிச்சா போதும்” என்று மேலதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தார்கள். அருண் சார் அதற்கு உடன்படவில்லை.

“மாணவர்கள் marks மட்டும் வாங்குற மெஷின் இல்ல. அவர்களுக்கு கனவுகள் இருக்கு,” என்று அவர் ஒருமுறை கூட்டத்தில் சொல்லியிருந்தார்.

அந்த ஒரு வார்த்தை அவருக்கு பிரச்சனைகளின் தொடக்கம் ஆனது.

மெல்லமெல்ல அவருக்கு unnecessary complaints வந்தது. classes observe பண்ணுறதுனு பெயர்ல அவரை கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் விசாரணை செய்யப்பட்ட மாதிரி இருந்தது.

நான்கு மாத நூலக காத்திருப்புக்கு பின்பு
ஒரு நாள், Head Master அவரை அலுவலகத்திற்கு அழைத்தார்.

“நீங்க நல்ல ஆசிரியர் தான். ஆனா நம்ம system-க்கு adjust ஆகணும். இல்லனா…” என்று அர்த்தமுள்ள மௌனம்.

அருண் சார் சிரித்தார். அந்த சிரிப்பில் சோர்வும் இருந்தது, ஆனால் அடங்காத மனமும் இருந்தது.

அடுத்த வாரம், பள்ளியில் ஒரு செய்தி பரவியது—அருண் சார் மாறுதல் கேட்டிருக்கிறார்.

மாணவர்கள் அதைக் கேட்டு நம்பவில்லை. “சார், நீங்க போக மாட்டீங்க இல்லையா?” என்று கேட்டார்கள்.

அவர் நேராக பதில் சொல்லவில்லை. “நீங்க நல்லா படிங்க… அதுவே எனக்கு சந்தோஷம்,” என்றார்.

மாறுதல் நாளில், அந்த வழித்தடம் வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. மாணவர்கள் எல்லாம் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். சிலர் அழுதார்கள்.

ஒரு சிறிய மாணவன் வந்து கேட்டான், “சார், நீங்க போய்ட்டு நம்மை மறந்துடுவீங்களா?”

அருண் சார் மெதுவாக அவன் தோளில் கை வைத்தார்.
“நான் உங்களை மறக்க மாட்டேன்… நீங்க உங்க கனவுகளை மறக்காதீங்க,” என்றார்.

அவர் நடந்து சென்றார். அந்த வழித்தடம் அவரின் அடிகளின் ஒலியை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டது போல.

அவரை அழுத்தம் கொடுத்து அனுப்பிய அந்த பள்ளி, இன்னொரு ஆசிரியரைப் பெற்றது. ஆனால் மாணவர்களின் மனதில் இருந்த அந்த “அருண் அண்ணா” என்ற இடம் மட்டும் யாராலும் நிரப்ப முடியவில்லை.

சில மனிதர்கள் ஒரு இடத்தை விட்டு சென்றாலும், அவர்கள் விதைத்த கனவுகள் அங்கேயே வளர்ந்து கொண்டே இருக்கும்.

Wednesday, September 4, 2024

ஆண்களில் உள்ள 'சிங்கம்' பெண்களை பயமுறுத்துவதில்லை

ஒரு பெண்ணின் ரகசியம்.
(அனைத்து ஆண்களும் படிக்க வேண்டிய தகவல்)

ஒரு நாள், புதிதாகத் திருமணமான ஒரு இளைஞன் தன் மனைவியைக் கோவமாக திட்டி கத்திக் கொண்டிருந்தான், அவனுடைய தந்தை அவனை அழைத்து, 'நாம் போடும் கூச்சல் மற்றவர்களை பயமுறுத்தும். ஆனால் உன் மனைவியை அல்ல." என்றார்.

உங்கள் அச்சுறுத்தல்கள் அவளை பலப்படுத்துகின்றன. ஒரு பெண் அச்சுறுத்தப்பட்டால், அவள் அடக்கப்படுகிறாள் என்று பெரும்பாலான ஆண்கள் நம்புகிறார்கள், ஆனால் பெண்கள் அச்சுறுத்தப்படும்போது வலிமையாக மாறுகிறார்கள்.

ஒரு ஆண் தன்னை அச்சுறுத்தி கத்தும்போது ஒரு பெண் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவள் உள்ளுக்குள் அமைதியாக இல்லை. அவள் ஆணின் பலவீனத்தை மதிப்பிடுகிறாள், அவனை எப்படி அடக்குவது, என்று மதிப்பிடுகிறாள்.

ஒரு பெண்ணின் இதயத்திற்குள் நுழையும் வழி, அவளை அச்சுறுத்தி அடிபணியச் செய்ய முயற்சிப்பதல்ல என்பது ஆண்களுக்குத் தெளிவாக புரிய வேண்டும்.

காதலும் அன்பும் மட்டுமே பெண்களை பலவீனமாக்குகிறது. நீங்கள் ஒரு பெண்ணை உண்மையாக நேசித்து அதைக் வெளிக் காட்டினால், அவள் உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லாமல் அன்புடன் இருப்பாள். ஆனால், ஒரு பெண் தான் உங்கள் பொம்மை போல் இருப்பதை உணர்ந்தால், நீங்கள் அவளைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் அல்லது நீங்கள் ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் அலல்து கட்டுப்படுத்துகிறீர்கள், என்றால் தன்மானம் அவளை ஆக்கிரமிக்கிறது. அவள் உடல் ரீதியாக உங்களுக்கு எதிராக நிற்காமல் இருக்கலாம், ஆனால் அவள் மன ரீதியாக உங்களுக்கு எதிராக போய்விடுவாள். ஒரு நாள், நீங்கள், அவளும், குழந்தைகளும் உங்களை அவர்களின் சொற்களைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதைப் பார்ப்பீர்கள் அல்லது அதை தாங்க முடியாமல் விரைவாக இறந்துவிடுவீர்கள்.

பல வருடங்களுக்கு முன் கணவன் அடித்துக் கொண்டிருந்த அந்த பெண்கள் இன்று குழந்தைகளுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கிறார்கள். தாய்மார்களுக்கு குழந்தைகளின் அனுதாபம் இருக்கிறது, ஆண்கள் கடைசியில் தனிமையில் தவிக்கிறார்கள்.

ஆண்களுக்கு எதிராக எப்படி வாழ்வது என்பது பெண்களுக்குத் தெரியும்.

ஆண்களில் உள்ள 'சிங்கம்' பெண்களை பயமுறுத்துவதில்லை அல்லது அவர்களை உங்களுக்கு அடிபணியச் செய்யாது, அது ஒரு பெண்ணை வெல்வது காதல் மட்டுமே, கட்டாயப்படுத்துவதோ அல்லது அச்சுறுத்துவதோ அல்ல. சக ஆண்களை அடக்கலாம், ஆனால் உங்கள் மனைவியை அல்ல. பெண்களுக்கு இயற்கையாகவே வலிகளைத் தாங்குவது எப்படி என்று தெரியும்.

அவர்களுக்கு தைரியம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தான் முட்டாள். ஆண்களிடம் இல்லாத தைரியம் அவர்களிடம் உள்ளது.

அச்சுறுத்தல்களை விட அன்பைக் காட்ட வேண்டும், உங்கள் மனைவியை நேசிக்கவும்!

உங்கள் மனைவியை நேசிப்பதற்கான இந்த சூத்திரம் அவளை வெல்ல உதவும். ஒரு பெண் நேசிக்கப்படும்போது, ​​அவளுடைய அனைத்து தைரியத்தையும் உடைத்து, அவள் உங்களை கைகளில் தாங்குகிறாள். ஒரு பெண் தன்னை நேர்மையாக காதலிக்கும் ஒரு ஆணுடன் வாழ, எதையும் செய்ய முடியும்.

உங்கள் மனைவியிடம் மென்மையாகப் பேசுங்கள், அவளிடம் கத்தாதீர்கள். கூச்சலிட்டு ஆணாக உங்கள் பலவீனத்தை ஆணவத்துடன் காட்டாதீர்கள்.

கூச்சலிட்ட ஆண்கள் எல்லாம், வாழ்க்கையின் இறுதியில் பேச ஆளில்லாமல் கூடத்தில் மூலையில் கிடத்தப்பட்டு இறுதியில் இறந்து போனவர்கள்.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..