Thursday, May 5, 2011

அண்ணா விட்டு விட்டுப் போன பாசறை...

காங்கிரசுக்குப் பல்லக்குத் தூக்குவதென்றால்
அண்ணாவின் பாசறைகளுக்குப் பேரின்பம்.
1972 தேர்தலில் இருந்து நேரு குடும்பத்தைப்
பொன்னாலும், தந்தத்தாலும், நவமணிகளாலும்
புதிது புதிதாகச் செய்யப்பட்டப் பல்லக்குகளில்
தூக்கிச் சுமப்பதிலே, பரவச நிலை என்பார்களே
அந்த நிலையில் திராவிட முன்னேற்றங்கள்
திளைக்கும். இப்போதும் அதே பக்திப் பரவசம்.
அதே போல பூனை, எலி, சுண்டைப்பழம் போன்ற
எல்லாக் கட்சிகளுக்கும் பரவசம்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல
"அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு"
என்று தமிழ்நாட்டில் பேச்சுச் சூறாவளியைக் கிளப்பி
வைத்தார் பேரறிஞர் அண்ணா. எல்லாரும் அண்ணா
என்னவோ செய்யப் போகிறார் என்று அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருக்கையில், பிரிவினைவாதத்
தடைச் சட்டம் கொண்டுவந்து நேரு போட்ட
ஒரு தும்மலிற்கு அஞ்சி அண்ணா தோளில்
கிடந்த துண்டைத் தூக்கிப் போடுவதுபோல
திராவிட நாடு என்ற பேச்சைத் தூக்கிப் போட்டார்"
என்று சொல்வார்கள்.

அதற்கு விளக்கம் சொல்லமுடியாமல்
வழ வழ கொழ கொழ என்று பூசி மழுப்பினர்
அண்ணாவும் அவரின் கழகமும்.
"தம்பி.... பாசறை இருந்தால்தானே தொடர்ந்து நாம்
போர்க்களம் காண முடியும். பிரிவினைவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் கட்சியை முடக்கி விட்டால் நமது
பாசறையல்லவா இல்லாமல் போய்விடும். அதனால்
நமக்குப் பாசறை முக்கியம் என்பதால் திராவிட நாட்டுக்
கோரிக்கையை கைவிடுகிறோம்" என்று அண்ணா தன்
கைப்பட எழுதி வைத்திருக்கிறார்.

அப்பொழுது கூட, சரி அண்ணா ஏதோ பெரிதாகச்
சொல்கிறார் என்று அண்ணாந்து அண்ணாந்து
பார்த்து சமாளித்துக் கொண்டனர் தமிழ்நாட்டு மக்கள்.

பாசறையில் இருந்து போர்க்களம் காண புறப்பட்ட
திராவிட முன்னேற்றங்கள் பற்பல.

ஒரு பாசறை தமிழ்நாட்டில் உள்ள சுடுகாடுகள்
முழுவதிற்கும் சென்று, அதில் எல்லோரும் சுகமாக
எரிவதற்காக, கூரை போடப்போகிறோம் என்று
சொல்லி, சுடுகாடுகள் எல்லாவற்றிலும் வெற்றி கண்டது.

"அண்ணா, இதோ பார்! உன் தம்பிகள் நாங்கள்
காவிரி, முல்லை, பாலாறைத் தடுத்து விட்டாலும்
கண்டு கொள்வதில்லை. ஆறுகளை வற்ற விட்டாலும்
மணலை அள்ளி அண்டை மாநிலம் முழுதும் அனுப்பி
அங்கே கட்டங்கள் வீடுகள் கட்ட வைத்துவிட்டோம்.
இன்றைக்குத் திராவிட நாடு முழுவதையும்
ஒரே மண்ணால் கட்டி இருக்கிறோம்.
உனது திராவிடநாட்டுக் கனவிற்கு எமது காணிக்கை"
என்று துண்டு நனைய ஆனந்தக் கண்ணீர்
விடுகிறது ஒரு பாசறை.

இந்தப்பாசறைக்கு சுடுகாட்டுப் பாசறை மேல்
பொறாமை. சுடுகாட்டுப் பெருமை
அந்தப் பாசறைக்குப் போய்விடக் கூடாது
என்று "சுடுகாடு கொண்டான்" என்ற பட்டம் கொடுத்து
சுடுகாட்டு நாயகர் செல்வகணபதியையும்
தனது பாசறைக்கே கொண்டு வந்துவிட்டது.

திராவிட நாட்டுக் கோரிக்கைக்கு எதிரான
பிரிவினைவாதச் சட்டத்தில் இருந்து
காப்பாற்றியதாக சொல்லி,
அண்ணா விட்டு விட்டுப் போன பாசறை
அண்ணா சொன்ன ஒவ்வொரு சொல்லையும்
நிறைவேற்றியிருக்கிறது.

அண்ணா கூட, திராவிட நாடு அல்லது
சுடுகாடு என்றுதான் சொன்னார்.

அவரின் பாசறையோ இரண்டையும்
வென்றுவிட்டது அல்லவா?

அண்ணாவின் பேச்சைத் தவறாகப்
புரிந்து கொண்டு தத்தளித்த
தமிழகமும் இன்றைக்குத்
தெளிந்துவிட்டது அல்லவா?

இன்னும் என்னென்ன குறிப்புகளை
அண்ணா விட்டுப் போயிருக்கிறாரோ?
ஆரறிவார்!

No comments: